100 கம்ப்யூட்டர் – 13 கார் – 200 பீரோ – 200 நாற்காலி ஜப்தி.. மதுரை கலெக்டர் அலுவலகமே காலி!
மதுரை: மதுரை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் இழப்பீடு கொடுக்காததால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சொந்தமான 13 கார்கள், 100 கணினிகள், 400 பீரோக்கள், 200 நாற்காலிகள், 20ஏசி, 20 லேப்டாப், பிரிண்டர்களை ஜப்தி செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உயர்நீதிமன்ற கிளை அமைந்துள்ளது. இதனருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலம் நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இது கடந்த 2004-ம் ஆண்டில் நடந்தது.

அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து மதுரை மாவட்ட 5வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை துறைக்கான நிலம் கையப்படுத்தும் தாசில்தார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் யாரும் இழப்பீடு கொடுக்கவில்லை. இதனால் 2023ம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வரை ரூ.2.42 கோடி செலுத்த வேண்டிய இருந்தது. அதன்பிறகும் இழப்பீடு வழங்காததால் தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3.50 கோடியை கடந்துள்ளது.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய மதுரை மாவட்ட 5வது கூடுதல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 200 பீரோ, 20 ஏசி, 100 ஸ்டீல் சேர், 200 மரபீரோ, 200 மரநாற்காலி, 200 பேன், 100 கணினி, 20 லேப்டாப், 50 பிரிண்டர், 8 ஜீப், 4 அம்பாசிடர் கார், கலெக்டரின் கார் உள்பட 13 கார்கள் உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி இன்று மனுதாரர்கள், வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று 'ஜப்தி' நடவடிக்கையில் ஈடுபட்டனர். கார்களில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அவர்களை அழைத்து பேச்சவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி மேற்கூறிய பொருட்களை எல்லாம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்யப்பட்டால் மாவட்ட நிர்வாகமே முடங்கும். ஊழியர்கள், அதிகாரிகள் பணி செய்ய முடியாத நிலை உருவாகும். இதனால் கலெக்டர் ஆகாஷ் பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது? பொருட்கள் ஜப்தி செய்யப்படுமா? இல்லாவிட்டால் இழப்பீடு பணம் வழங்கப்படுமா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications