கரூர் சம்பவம் அரசு வேலைக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள்.. நாளை விசாரணை! விஜய் பணி ஆணை வழங்க முடியுமா?
மதுரை: கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. முதல்வர் விஜய் நாளை கரூர் சென்று கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசு பணி வழங்க உள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் நாளை கரூர் செல்வதாக அறிவித்தார். அதோடு, கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மொத்தம் 32 பேருக்கு நாளை கரூர் செல்லும் விஜய் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இதற்காக தவெக சார்பில் முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தமிழக வெற்றி கழக அரசியல் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு பணி வழங்க எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வருவதால் இது வழக்கினை நீர்த்துப்போக செய்யும் என்றும் விமர்சித்தனர். மேலும் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் தீரன் திருமுருகன் என்பவரும், மனிதநேய ஜனநாயக கடிசியின் மாநில நிர்வாகி சீனி அகமது ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், "தமிழக வெற்றி கழக அரசியல் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்க உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே லட்சக்கணக்கான தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியாயமான முறையில் அரசு வேலைக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், முறையான விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக அரசு வேலைகளை வழங்குவது நேர்மையாக படிக்கும் மாணவர்களின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பு உரிமையையும் பறிக்கும் செயல். மேலும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறது. இதில் குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முக்கிய சாட்சிகளாக இருக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை திசை திருப்பும் நடவடிக்கையாக அமையும்.
எனவே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்திற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீனி முகமது சார்பில் ஆஜரான வக்கீல்கள், இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டனர்.
அதற்கு நீதிபதிகள், தங்களது முறையீட்டினை சம்பந்தப்பட்ட டிவிஷன் பெஞ்சில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கு நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை வழக்கு விசாரணை நடக்கும் சூழலில், கரூர் செல்லும் விஜய்யால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications