சிங்கத்தின் வாயில் 30 நிமிடங்கள்! குஜராத் கிராமவாசி உயிர் தப்பியது எப்படி? வனத்துறை அட்வைஸ் என்ன
சென்னை: குஜராத் காடுகளின் எல்லையோர பகுதிகளில் சமீப காலமாக மனிதர்களுக்கும் சிங்கங்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதனால்தான், சிங்கங்களிடம் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து வனவிலங்கு நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். ஆசிய சிங்கங்களின் தனித்துவமான குணங்களையும், இந்த மோதல்களைத் தடுப்பதற்கான தீர்வையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் குஜராத்தில் நீங்கவில்லை. பாவ்நகர் மாவட்டம் கரஜியா கிராமத்தில், காலூபாய் போகாபாய் பர்மர் என்ற கால்நடை வளர்ப்பவர் தனது பசுக்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வந்த பெண் சிங்கம் ஒன்று அவரைப் பின்புறமாகத் தாக்கி, அவரது கையை வாயால் கவ்விக்கொண்டு சுமார் 30 நிமிடங்கள் தரையோடு அழுத்திப் பிடித்திருந்தது.

குஜராத் சிங்கத்தின் வாயில் 30 நிமிடங்கள்
|இந்த ஆபத்தான சூழலில் அவர் பதற்றமடைந்து கத்தாமல், எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தார். அந்த நிதானமே அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு, கற்களை வீசி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிங்கத்தை விரட்டியிருக்கிறார்கள். நகக் கீறல்களுடன் படுகாயமடைந்த காலூபாய் உடனடியாக மீட்கப்பட்டு ஆபத்தான கட்டத்தை தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிங்கம் தாக்குதல்
உண்மையிலேயே சிங்கங்கள் எல்லாரையுமே, எப்போதுமே தாக்கக்கூடியதா? பொதுவாக சிங்கங்கள் மனிதர்களை தங்களின் இரையாக கருதுவதில்லை. ஆனால், தங்களின் எல்லைக்குள்ளோ அல்லது குட்டிகளுக்கோ ஆபத்து என்று நினைத்தால் அவை தற்காப்புக்காக தாக்க தொடங்கி விடுமாம்.
அதிலும் பெண் சிங்கங்கள் தங்களின் குட்டிகளை பாதுகாப்பதற்காக ஆக்ரோஷமாக செயல்படுமாம். அதேபோல சிங்கங்களுக்கு வயதாகி விட்டாலோ, அல்லது காயங்கள் ஏற்பட்டுவிட்டாலோ காடுகளில் வேகமாக ஓடவும் முடியாது, வேட்டையாடவும் முடியாது. அப்படியான சூழலில், மனிதர்களை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சிங்கங்கள் போன்ற விலங்குகளிடம் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டால், பதற்றமடையாமல் நிதானமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். விலங்கை பார்த்ததுமே பயந்து பின்புறமாக திரும்பி ஓடினால், அதன் வேட்டையாடும் இயல்பைத் தூண்டக்கூடும். அதனால் ஓடுவதைத் தவிர்க்க வேண்டும்.. .
நேருக்கு நேர் பார்வை - பின்னோக்கி நகர்தல்
அதாவது சிங்கத்தின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு, மெதுவாகப் பின்னோக்கி நகர வேண்டும். நமது கைகளை தலைக்கு மேலே உயர்த்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், சிங்கத்துக்கு நாம் பெரிய உருவமாகத் தோன்றலாம். இதனால் அது தாக்கத் தயங்கலாம்.
இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிரப்படுவது போல சிங்கத்தைத் தடவிக் கொடுப்பது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதிகாரப்பூர்வ வனத்துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே அவசியமாகும்.
சிங்கம் மிக அருகில் நெருங்கி வந்தாலும் சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும். விடியற்காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில்தான் சிங்கங்கள் அதிகமாக வேட்டையாடும் என்பதால், அந்த நேரங்களில் கூடுதல் கவனம் தேவை..
அதேபோல சிங்கம் தன் வாலை ஆட்டினால் அது அச்சுறுத்தலை உணர்கிறது என்று அர்த்தம். அதுவே வாலை விறைப்பாக நேராக வைத்திருந்தால் உங்களை வேட்டையாடத் தயாராகிறது என்று அர்த்தம்.. எக்காரணம் கொண்டும் அந்த நேரத்தில் மரத்திலும் ஏறக் கூடாது.. ஏனென்றால் சிங்கம் மனிதர்களை விட வேகமாக மரமேறுமாம்..
நெருப்பு காட்டக்கூடாது, மரம் ஏறக்கூடாது
நெருப்பைக் கண்டு சிங்கம் பயப்படாது என்பதால் நெருப்பை காட்டியும் தப்பிக்க முடியாது. சிங்கம் நகரமால் அப்படியே நின்றால், மெதுவாக பின்னோக்கி நகர வேண்டும். ஒருவேளை சிங்கம் நகரத் தொடங்கினால், உடனே அப்படியே உறைந்து நின்றுவிட வேண்டுமாம்.
ஆண், பெண் சிங்கங்களின் வேட்டையாடும் முறை வேறுபட்டது. பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டைகளில் முன்னிலை வகிக்கின்றன. கூட்டமாக செயல்பட்டு இரையைச் சுற்றிவளைத்து தாக்குவது அவற்றின் இயல்பு. ஆனால் ஆண் சிங்கங்களோ, தங்களின் எல்லைக்குள்ளோ அல்லது கூட்டத்திற்குள்ளோ நேரடி அச்சுறுத்தல் ஏற்படும்போது மட்டுமே களமிறங்கும். ஆண் சிங்கங்கள் தங்களின் பலத்தைப் பயன்படுத்தி, எதிரிகளை தங்களின் எல்லையை விட்டே விரட்ட பார்க்குமாம்.
எனவே சிங்க நடமாட்டம் உள்ள பகுதிக்குச் செல்லும்போது பெப்பர் ஸ்ப்ரே அல்லது துப்பாக்கி வைத்திருப்பதே தப்பிப்பதற்கான சிறந்த வழி.
மனிதர் - வனவிலங்கு மோதல்
சமீப காலமாக குஜராத் காடுகளின் எல்லையோரப் பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிங்கங்களை ஒட்டுமொத்தமாக கூண்டுகளில் அடைப்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர, அது காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
மனிதர்-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
சிங்கங்கள் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பதும், கால்நடைகளைப் பாதுகாப்பான தொழுவங்களில் அடைப்பதும் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும், காடுகளின் எல்லையை ஆக்கிரமிப்பதை கைவிட்டு, வனவிலங்குகளின் நடமாட்டப் பாதைகளை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதன் மூலம் மனித உயிர்களையும் ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள்...!!!












Click it and Unblock the Notifications