தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது.. கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு கர்நாடகா சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
பெங்களூர்: 'தக்லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது சர்ச்சையை கிளப்பிது. கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்பட்டது. கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாடகாவின் கனகபுரா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இந்த வழக்கு பெங்களூர் எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை வரும் 22ம் தேதி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தக்லைஃப்'. படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.

அப்போது ‛‛தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்'' என்று கமல்ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை.
இதனால் 'தக்லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடாமல் கன்னட அமைப்பினர் தடுத்தனர். இதற்கிடையே தான் கமல்ஹாசனுக்கு எதிராக ராமநகர் மாவட்டம் கனகபுரா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதில் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று அவர் கூறியது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார் என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகைளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இந்த சர்ச்சையில் சிக்கியபோது அவர் ராஜ்யசபா எம்பியாக இல்லை. ஆனால் தற்போது அவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இதனால் அவருக்கு எதிரான இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 22ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications