வேல்முருகன் பாயிண்ட்டை பிடிச்சிட்டாரு.. அரசின் காப்பீட்டு திட்ட பேக்கேஜ்.. இலவச சிகிச்சை இனி இல்லை?
சென்னை: தமிழக ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிகிச்சைகளுக்கான பேக்கேஜ் தொகை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், அதனால் முதியவர்களின் நலனைக் காக்க இத்திட்டத்தின் குறைகளை நீக்கி, திருத்தப்பட்ட புதிய அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2026 கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் புதிய காப்பீட்டுத் திட்டம்
5 ஆண்டுகளுக்கு அமலுக்கு வந்துள்ள இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ரூ.7.50 லட்சம் வரையும், 46 தீவிர நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரையும் பணமில்லா காப்பீட்டு சிகிச்சை பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் 2,992 சிகிச்சைகளுக்காக 1,535 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிய அடித்தட்டு பணியாளர்களான அங்கன்வாடி, சத்துணவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான மாதாந்திர பிரீமியம் தொகையை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், சிபிஎஸ் மற்றும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (TAPS) கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் வாழ்க்கைத்துணைக்கும் இக்காப்பீடு முழுமையாகப் பொருந்துவதுடன், தற்போது மாநிலம் முழுவதும் தடையின்றி அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார்.. இதுகுறித்து தமிழக அரசுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை தனது சோஷியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
வேல்முருகன் சொல்வதாவது, "தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேக்கேஜ் எவ்வளவு வழங்கப்படும் என்று அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த பேக்கேஜ் காப்பீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ப பேக்கேஜ் முறையாகவே உள்ளது. முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைக்காகும் செலவில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது. இப்போது உள்ள பேக்கேஜ் திட்டத்தில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தான் கிடைக்கும் என்று தெரியவருகிறது.
காப்பீட்டுத் திட்டத்தில் பேக்கேஜ்
காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று மெடிக்கல் மேனேஜ்மென்ட், மற்றொன்று அறுவை சிகிச்சை. மெடிக்கல் மேனேஜ்மென்ட்டில் இதய அடைப்பு, ரத்த அடைப்பு, தீவிர சுவாசப் பிரச்சினை, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை உண்டு.
எந்த ஒரு மெடிக்கல் மேனேஜ்மென்ட்டாக இருந்தாலும் இந்த பேக்கேஜ் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏசி அறை கிடையாது. பொது வார்டில்தான் தங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த உச்ச வரம்பு ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, லென்ஸ் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டி, இரண்டு ஸ்டெண்ட் வைத்தாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் பேக்கேஜ் தொகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ்க்கு மருத்துவத் துறை ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும்" என்று வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications