"இந்த" சின்ன தப்பு செய்தால் கூட.. ரூ.26 கோடி அபராதம்.. அமீரகத்தில் வந்த புதிய சட்டம்
துபாய்: ஐக்கிய அமீரகம் தனது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பாரம்பரிய சின்னங்கள், தொல்லியல் பொருட்களை சேதப்படுத்தினால் அல்லது அதை திருடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரூ.26 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். கூடவே சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் அமீரகம் செல்லும் நிலையில், அங்குள்ள சட்ட விதிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் தெரியாமல் நாம் செய்யும் செயலுக்கும் கூட மிகப் பெரிய அபராதத்தை கட்ட வேண்டி இருக்கும். சமீபத்தில் கூட அமீரகம் தனது கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் முக்கியமான சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.

புதிய சட்டம்
அபுதாபியில் நடைபெற்ற பெடரல் தேசிய கவுன்சிலின் 13வது அமர்வில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அங்குள்ள வர்த்தக மண்டலங்கள் உட்பட அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்படும். அதன்படி தொல்லியல் சின்னங்கள், வரலாற்று கட்டிடங்கள், பாரம்பரிய கலைகள், இயற்கை மரபுகள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார சொத்துகள் பாதுகாக்கப்படும்.
ரூ.26 கோடி அபராதம்
இந்த சட்டத்தின் படி, பாரம்பரிய கட்டிடங்கள் அல்லது தொல்லியல் சின்னங்களை திட்டமிட்டு சேதப்படுத்துவது, இடிப்பது, அவமதிப்பது அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது போன்ற குற்றங்களுக்கு 5 லட்சம் முதல் 1 கோடி திர்ஹம் வரை, அதாவது ரூ.26 கோடி வரை, அபராதம் விதிக்கப்படும். மேலும், சிறைத் தண்டனையும் கூட விதிக்கப்படும். கலாச்சார ரீதியாக முக்கியமான பொருளை வைத்திருப்பவரே இதுபோல செய்தால் தண்டனை மேலும் அதிகரிக்கப்படலாம்.
மேலும், அனுமதியின்றி தொல்லியல் அகழாய்வு நடத்துவது, தொல்லியல் பொருட்களை போலியாக தயாரிப்பது, தவறான ஆவணங்களை காட்டி பாரம்பரிய பொருட்களை கடத்துவது, கலாச்சார ரீதியாக முக்கியமான இடங்களில் குப்பை கொட்டுவது, கலாச்சார மரபுகளை அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 3 லட்சம் முதல் 50 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
குற்றம்
உரிய அனுமதி இல்லாமல் பாரம்பரிய பொருட்களை வேறொரு இடத்திற்கு மாற்றுவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி நபர் ஒருவரிடம் இதுபோல வரலாற்றுச் சொத்து இருந்து, அதை அவர் முறையாகப் பராமரிக்காமல் புறக்கணிப்பதும் குற்றமாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் முதல் 50 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சமாக, யாரேனும் தொல்லியல் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளைக் கண்டுபிடித்தால் அதை அப்படியே பாதுகாத்து, 48 மணி நேரத்திற்குள் அமீரக அரசு அல்லது போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோல உடனடியாக தகவல் தெரிவிப்போருக்கு அரசு வெகுமதியும் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
முக்கியம்
மேலும், இந்த சட்டத்தில் முதல் முறையாக Digital Heritage என்ற ஒன்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்று அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாக்க இந்த புதிய பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 1700 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரலாற்று கட்டிட பாரம்பரியம் என்றும் 1960க்கு பிறகு கட்டப்பட்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிகள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நவீன கட்டிட பாரம்பரியம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கடலுக்கடியில் உள்ள கப்பல் சிதைவுகள், மூழ்கிய விமானங்கள் மற்றும் பிற தொல்லியல் எச்சங்களுக்கும் கூட இந்த சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தியர்கள் பலரும் அமீரகம் செல்லும் நிலையில், இந்த விதி தெரியாமல் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது. பிறகு சிறை தண்டனையுடன் சேர்த்து மிகப் பெரிய அபராதத்தையும் கட்ட வேண்டி இருக்கும்.














Click it and Unblock the Notifications