கரூர்ல 41 பேர கொன்னவங்க ஜாலியா சுத்துறாங்க.. என்மேல கேஸ் போட்ருக்காங்க! புது சிக்கலில் பயாஸ் உசைன்!
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சம்பவம் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசியதாகக் கூறி யூடியூபர் பயாஸ் உசைன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
PUN DANK யூடியூப் சேனலில் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பயாஸ் உசைன், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இழிவாக பேசியதாக வழக்கறிஞர் ஆதித்யன் என்பவர் அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், அதனை நகைச்சுவை நிகழ்ச்சியில் கேலியாக பேசியது பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஆதித்யன்," கடந்த ஜூன் 7 தேதி பயாஸ் உசைன் தனது நிகழ்ச்சியில், '41 பேரைக் கொன்றவர்கள் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் என் மீது வழக்கு போடுகிறார்கள்' என்பதுபோன்ற கருத்துகளையும், கரூர் துயரச் சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
உயிரிழந்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலான இத்தகைய பேச்சுகள் சமூக வலைதளங்களில் தேவையற்ற சர்ச்சைகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன என்று கூறினார். எனவே, பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய பயாஸ் உசைன் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications