கண்டுக்காத "இந்தியா கூட்டணி" 3வது அணியை உருவாக்க கேசிஆரை ஏற்றிவிடும் ஓவைசி.. என்ன சொல்லியிருக்கார்?
ஐதராபாத்: இந்தியா கூட்டணி எனக்கு அழைப்பு விடுக்காதது பற்றி கவலை இல்லை என்றும் சந்திரசேகர் ராவை மூன்றாவது அணியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஐதராபாத் எம்.பி ஓவைசி கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், திமுக , ஆம் ஆத்மி என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது.

நாடு முழுவதும் பாஜக கூட்டணியை ஒருங்கிணைந்து எதிர்கொண்டு வீழ்த்துவது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து வருகின்றனர். மறுபக்கம் பாஜகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பாஜக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் உள்ள சில கட்சிகள் இடம் பெறவில்லை.
எடுத்துக்காட்டாக ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறவில்லை. அதேபோல உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை. முக்கியமாக பிரதமர் கனவுடன் துவகக்த்திலேயே மூன்றாவது அணியை ஆரம்பிக்க முயற்சித்த தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை.
அதேபோல பாஜகவின் பீ டீம் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் ஐதரபாத் எம்.பி ஓவைசியின் கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை. இதனால், அரசியல் களத்தில் இந்தியா கூட்டணி, பாஜகவுக்கு எதிராக ஒரு அணி உருவாக்கப்படுமா? என்ற பேச்சுக்களும் அடிபடாமல் இல்லை. இந்த நிலையில், ஐதராபாத் எம்.பியும் ஏஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஓவைசி, இந்தியா கூட்டணியில் இடம் பெறாதது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஓவைசி கூறுகையில், எனக்கு அழைப்பு விடுக்காதது பற்றி நான் கவலைப்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் வடகிழக்கில் உள்ள சில கட்சிகள், மகராஷ்டிராவில் உள்ள சில கட்சிகளும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. மூன்றாவது அணியை உருவாக்கி சில கட்சிகளை இணைக்குமாறு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
அரசியல் வெற்றிடம் இருக்கிறது. கேசிஆர் தலைமை தாங்கி முன்னெடுத்து சென்றால் அந்த வெற்றிடம் நிரம்பி விடும். "இந்தியா" கூட்டணியால் இந்த வெற்றிடத்தை நிரப்பமுடியாது" என்றார். இந்தியா கூட்டணிக்கு எதிராக ஓவைசி கருத்து கூறியிருப்பதும், மூன்றாவது அணியை உருவாக்குமாறு சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டு இருப்பதாக சொல்லியிருப்பதும் தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications