பிரதமர் மோடிக்கு கேசிஆர் பரபர கடிதம்! நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வேற இருக்கே.. என்ன மேட்டர்
ஹைதராபாத்: அடுத்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு வரும் செப். 18ஆம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக அரசு பல முக்கிய மசோதாக்களைக் கொண்டு வர உள்ளதாக இணையத்தில் தொடர்ந்து செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" குறித்து முக்கிய மசோதாவை மத்திய அரசு இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர வேறு பல முக்கிய மசோதாக்களும் இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடிதம்: இந்தச் சூழலில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் சந்திரசேகர ராவ் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கேசிஆர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓபிசி பிரிவினருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவையும் கொண்டு வர வேண்டும் என அவர் மற்றொரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் கூடிய கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிஆர்எஸ் எம்பிக்கள் இந்த கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என்று சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
கேசிஆர்: இது குறித்து தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெண்கள் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டில் பிஆர்எஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனைகளில் நாங்கள் எப்போதும் குரல் கொடுத்தே வருகிறோம். இதில் மத்திய அரசை உரிய நடவடிக்கை எடுக்க வைப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாக நடந்தாலும் தனித்தனியாக நடந்தாலும் பிஆர்எஸ் நிச்சயம் வெல்லும் என்பதால் எதிர்காலம் குறித்து எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்று கேசிஆர் தனது எம்.பி.க்களுக்கு இந்த கூட்டத்தில் உறுதியளித்தார்.

இட ஒதுக்கீடு: முதல்வர் கேசிஆர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "கடந்த 2014 ஜூன் 14ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட உடன் நடந்த முதல் கூட்டத்தில் தெலுங்கானா சட்டசபையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஏற்கனவே தெலுங்கானாவில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை பிஆர்எஸ் கட்சி ஒருமனதாக ஒப்புக்கொண்டதாகவும் கேசிஆர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல தெலுங்கானாவில் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலச் சட்டசபைகளில் ஒபிசி பிரிவினருக்கும் 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதாகவும் இந்த இரண்டையும் மத்திய அரசு இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என்று கேசிஆர் தனது கடித்ததில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications