மகளிருக்கான இலவச பஸ் சேவையை விமர்சித்த.. எல்&டி நிறுவன இயக்குநர்.. எதுக்காகன்னு பாருங்க
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால் மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக எல்&டி நிறுவன இயக்குனர் ஷங்கர் ராமன் விமர்சித்துள்ளார். மேலும் 2026-க்கு பிறகு மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் நலனை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் போன்ற பல திட்டங்கள் மகளிர் உரிமையை நிலை நாட்ட அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் மகளிருக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால் மகளிர் மத்தியிலும் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தான் மகளிருக்கான இலவச பேருந்து சேவையால் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருவது குறைந்து இருப்பதாக எல் &டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷங்கர் ராமன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷங்கர் ராமன் கூறியதாவது:- போக்குவரத்து அமைப்பில் பாலின பாகுபாடு நிலவுகிறது. பேருந்துகளை பெண்கள் எந்த கட்டணமும் இன்றி பயன்படுத்துகிறார்கள். அதேவேளையில், மெட்ரோ ரயில்களை ஆண்கள் சராசரியாக ஒரு டிக்கெட்டிற்கு ரூ.35 செலவு செய்து பயன்படுத்துகிறார்கள். ஐதரபாத் மெட்ரோவில் நாளொன்றுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
தற்போதைய பயணம் செய்யும் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த திட்டத்தில் எங்களின் சுமையை குறைக்க வேண்டியுள்ளது. தெலுங்கானா அரசுடன் பேச்சுவார்த்தை 3 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் பெற வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளோம். மெட்ரோவுடன் தொடர்புடைய சில ரியல் எஸ்டேட்களை பணமாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என்றார்.
மாநில அரசின் கட்டணமில்லா பேருந்து சேவை எந்த அளவு மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு பதிலளித்த, ஷங்கர் ராமன், பெண்கள் ரயில்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. பஸ்களின் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். அதேவேளையில், பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. பஸ்களில் பயணம் செய்த ஆண்கள் ரயில்களுக்கு வருகிறார்கள்.
வாக்குறுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மாநிலத்தின் நிதிநிலைக்கு உதவுவது இல்லை. இந்த விவகாரத்தில் எந்த வேடிக்கையும் இருக்க கூடாது. ஹைதரபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை 2026 க்கு பிறகு விற்பனை செய்ய எல்&டி திட்டமிட்டு இருப்பதாகவும் ஷங்கர ராமன் தெரிவித்தார்.
ஹைதரபாத் மெட்ரோ ரயிலில் எல்&டி நிறுவனம் 90 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. தெலுங்கான அரசுக்கு மீதமுள்ள 10 சதவிகித பங்குகள் உள்ளன. மெட்ரோ சிஸ்டத்தை 65 ஆண்டுகள் இயக்க எல்&டிக்கு சலுகை உள்ளது.












Click it and Unblock the Notifications