ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு படுதோல்வி உறுதி.. இதுதான் காரணம்! உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்
ஹைதராபாத்: இந்தாண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் யார் வெல்வார் என்பது குறித்து பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அத்துடன் ஆந்திராவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவில் இந்த முறை ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

பிரசாந்த் கிஷோர்: கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.. லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், ஆந்திராவில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர், இந்த முறை நடக்கும் ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் எனத் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஜெகன் தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையானவர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், அது உண்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
படுதோல்வி: உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு நிலைமை சரியாக இல்லை. அவர் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார். இப்போது ஆந்திராவில் என்ன அரசியல் சூழல் இருக்கிறது என்ற தரவுகள் என்னிடம் இல்லை. ஆனால் அவர் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைவார் என்று நான் நினைக்கிறேன். தோல்வி என்றால் சின்ன தோல்வி இல்லை. அவர் மிகப் பெரியளவில் தோல்வியடையப் போகிறார்.
ஆந்திர மக்கள் கோபத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆளாகிவிட்டார் என்றே தெரிகிறது. அவர் ஆந்திராவை நடத்திய விதமே இதற்குக் காரணமாகும். ஆந்திராவைப் பொறுத்தவரை அது ஒரு நடுத்தர வருவாய் மாநிலமாகும். அப்படி இருக்கும் போது நீங்கள் மூலதன உருவாக்கம் மற்றும் புதிய உள்கட்டமைப்பு குறித்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு நடுத்தர வருமானம் கொண்ட மாநிலத்தில் விநியோகம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தினால், அது மிகப் பெரிய தவறாக முடியும். அதுவே அவர் செய்த தவறு என நினைக்கிறேன்.
என்ன பிரச்சினை: நடுத்தர மாநிலமான ஆந்திரா, வருமானத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக நேரடியாக மக்களிடம் பணத்தைக் கொண்டு போகும் திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். கூடுதலாகக் கடனை வாங்கி அவர்கள் இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்தினார்கள். இது குறைந்த வருமானம் உள்ள மாநிலத்தில் வேலை செய்யக்கூடும், ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில், நகரமயமாக்கல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
அப்படி இருக்கும் போது வருமானத்தை அதிகரிக்காமல் இலவசத் திட்டங்களை மட்டுமே கொடுத்தால் அது ஒர்க் அவுட் ஆகாது. ஏனென்றால், அது ஏற்கனவே ஓரளவுக்கு வளர்ந்த மாநிலம் என்பதால் இதுபோன்ற உதவி திட்டங்களுக்கு 50 சதவீதம் பேர் கூட தகுதி பெற மாட்டார்கள். அவர்களுக்கு இத்திட்டம் சென்றடையவே செய்யாது. இது எப்படி ஜெகனுக்கு பலன் தரும் சொல்லுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications