ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்
ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது
ஹைதராபாத்: ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார்.. ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார்.. அவரை பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும், ரஜினிகாந்த் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று மதியம், ரஜினிகாந்த்துக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது... அதனால், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது... பிறகு சிறிது நேரத்திலேயே ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது,

அதில், ரஜினிகாந்த்துக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது... அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.. ரத்த அழுத்த அளவில் மாறுபாடு, உடல் சோர்வை தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை... அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன" என்று கூறியிருந்தது.
இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது மறுபடியும் அப்பல்லோ நிர்வாகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.. அதில், "ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன... அவர் இன்றிரவு ஆஸ்பத்திரியில் இருப்பார்.. நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.
யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என்று குடும்பத்தினரும், சிகிச்சை தரும் டாக்டர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்... அவரது மகள் ஐஸ்வர்யா அவரோடு தான் இருக்கிறார்... தெலங்கானா ஆளுநர் டாக்டர்களுடன் போனில் பேசினார்... ரஜினி அவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஜினியின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்... அதில், ரஜினியின் உடல் நலன் குறித்து விசாரிப்பதற்காக அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
முன்னதாக, ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளிட்டோர் போனில் விசாரித்தனர்.. மேலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications