அடபாவமே.. அமைதியா சாப்பிட்ட சிறுவன்.. டவுசருக்குள் நுழைந்து கடித்த எலி.. சிக்கலில் பிரபல ஓட்டல்!
ஓட்டலின் கழிவறையில் இருந்து வேகமாக வந்த எலி சிறுவனின் கால் வழியாக டவுசருக்குள் நுழைந்து கடித்தது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற ஓட்டலில் 8 வயது சிறுவன் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் கழிவறையில் இருந்து வேகமாக வந்த எலி ஒன்று அவனது டவுசருக்குள் நுழைந்து கடித்தது. இதை பார்த்த சிறுவனின் தந்தை எலியை பிடித்து தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ வெளியான அந்த ஓட்டல் சிக்கலில் சிக்கி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கொம்பல்லியில் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மெக்டொனால்ட் ரெஸ்டாரன்ட் ஓட்டல் உள்ளது. இங்கு சாவியோ ஹென்ரிக்யோஸ் என்பவர் தனது மனைவி, 8 வயது மகன் டிவெய்ன் ஹென்ரிக்யோசுடன் சாப்பிட சென்றார்.
3 பேரும் ஓட்டலில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர். மகன் டிவெய்ன் ஹென்ரிக்யோஸ் அருகே தந்தை சாவியோ அமர்ந்தார். அவர்களின் எதிர் இருக்கையில் சாவியோவின் மனைவி அமர்ந்திருந்தார். இதையடுத்து அவர்கள் உணவு ஆர்டர் செய்தனர். உணவுகள் வந்த நிலையில் 3 பேரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

டவுசரில் நுழைந்து கடித்த எலி
அப்போது திடீரென ஓட்டலின் கழிவறையில் இருந்து ஒரு பெரிய எலி ஓடி வந்தது. இதை பார்த்தவுடன் சாவியோவின் மனைவி எழுந்த நிலையில் அந்த எலி அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட டேபிளின் அடியில் புகுந்தது. அதோடு கண்இமைக்கும் நேரத்தில் சாவியோவின் 8 வயது மகன் கால் மேல் ஏறி டவுசருக்குள் புகுந்தது. நொடி பொழுதில் அவன் தொடையில் கடித்தது.

அலறிய சிறுவன்
இதனால் சிறுவன் அலறி துடித்தான். உடனடியாக அவனது தந்தை சாவியோ டவுசரில் கைவிட்டு எலியை பிடித்து தூக்கி வீசினார். மேலும் ஓட்டல் சுகாதாரமற்ற முறையில் இருப்பதை நினைத்து அவர் ஊழியர்களை கடிந்து கொண்டு கோபத்தை வெளிக்காட்டி அங்கிருந்து புறப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று நடந்த விஷயங்களை கூறி தனது மகனுக்கு நோய் தடுப்புக்கான தடுப்பூசி, மருந்துகளை கிடைக்க செய்தார்.

சிக்கலில் சிக்கிய ஓட்டல்
மேலும் சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை கோரி சாவியோ சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் ஹைதராபாத் மாநகராட்சியின் உதவி உணவுத்துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

வெளியான வீடியோ
இதற்கிடையே ஓட்டல் கழிவறையில் இருந்து வந்த எலி சிறுவனின் டவுசருக்குள் நுழைந்து கடித்து வைத்தது தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications