தெலுங்கானா: ஆளும் பிஆர்ஸ் கட்சியை அலறவிடுதாம் காங்கிரஸ்..தலை தெறிக்க ஓடுமாம் பாஜக: பிக் டிவி சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியைத் தழுவும்; இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என பிக் டிவி சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் தற்போது முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. பிஆர்எஸ் ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ், பாஜக மும்முரம் காட்டுகின்றன.

கருத்து கணிப்புகள்: தெலுங்கானாவில் கடந்த சில மாதங்களாக ஆரூடங்கள் அடியோடு தலைகீழாக மாறி வருகின்றன. இம்மாநிலத்தில் முதலில் பிஆர்எஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என பல கருத்து கணிப்புகள் தெரிவித்தன. பின்னர் இந்த ரேஸில் திடீரென பாஜக முன்னணிக்கு வந்தது.
இப்ப காங்கிரஸ் ஆட்டம்: ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தெலுங்கானா களமே அதிரிபுதிரியாகிப் போனது. கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள், அதனை உடனுக்குடன் நிறைவேற்றியது, அதே பாணியை இம்மி பிசகாமல் தெலுங்கானாவில் செய்தது, தெலுங்கானா மக்களை அதிரவைத்த வாக்குறுதிகள் என காங்கிரஸ் ஆடிய ருத்ரதாண்டவம் தேர்தல் களத்தையே மாற்றிப் போட்டுவிட்டது. இப்போது வெளியாகும் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன.
காங்கிரஸ் ஆட்சி அமைக்குமாம்: தெலுங்கானா கள நிலவரம் தொடர்பாக அம்மாநில பிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 62 முதல் 69 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 46 முதல் 54 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 முதல் 7 இடங்களிலும் வெல்லுமாம்; ஆட்சி கனவில் மிதந்து கொண்டிருந்த பாஜகவுக்கு 3 முதல் 6 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது பிக் டிவி சர்வே.
காங். தலைவர்களுக்கே அதிர்ச்சி: இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த விஸ்வரூபத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களே நம்ப முடியவில்லை என்கின்றனர். டிவி விவாதம் ஒன்றில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமி, தெலுங்கானாவில் அடிப்படை கட்டமைப்பே எங்களுக்கு இல்லை என கருதினோம். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை கூட ஒருங்கிணைக்க சரியான நபர்கள் இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருந்தது. ஆனால் மக்கள் தென்னெழுச்சியாக காங்கிரஸை நோக்கி சாரை சாரையாக திரண்டு வந்தனர். கர்நாடகா தேர்தலுக்கு பின்னர் இந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications