சூடுபிடித்த தெலங்கானா தேர்தல் களம்.. வேட்புமனுவை தாக்கல் செய்யும் முதல்வர் சந்திரசேகர் ராவ்
ஹைதராபாத்: தெலங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் இக்கட்சிக்கு பயங்கர டஃப் கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் பாஜகவும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்தில் காலூன்ற முயன்று வருகிறது. குறிப்பாக பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து இம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் தெலங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த முறை தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரைதான் முதலமைச்சராக்குவோம் என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் பாஜகவுக்கு அப்படியான பிரகாசமான வெற்றி வாய்ப்பு ஏதும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆளும் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. "நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது. ஆனால் எத்தனை பிஆர்எஸ் தலைவர்கள் இப்படி பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்? இதிலிருந்தே இந்த மறைமுக கூட்டணியை புரிந்துக்கொள்ள முடியும்" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகளும் எம்எல்சியுமான கவிதா மீது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு குறித்து டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல மத்திய அரசின் விசாரணை கமிஷன்களாலும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். எனவே பிஆர்எஸ் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில்தான் கடந்த 3ம் தேதி தெலங்கானாவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. அதேபோல அதனை திரும்ப பெருவதற்கான கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இப்படி இருக்கையில் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். முதன் முதறையாக கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் அவர் போட்டியிட இருக்கிறார். கடந்த 2014 மற்றும் 2018 தேர்தல்களில் கஜ்வேலில் போட்டியிட்டு இரண்டு முறையும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால் இதே தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் வந்தேரு பிரதாப் ரெட்டி, கடந்த 2014 தேர்தலில் 19,391 வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் இதே 2018ம் ஆண்டு 58,290 வாக்குகளை பெற்றுள்ளார். எனவேதான் காமரெட்டி தொகுதியில் கூடுதலாக சந்திரசேகர் ராவ் களமிறங்குவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications