சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி.. டெல்லியில் நாளை தசரா நாளில் அறிவிப்பு வெளியாகிறது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புதிய தேசிய கட்சியை நாளை அறிவிக்க உள்ளார்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தெலுங்கானா மாநிலத்தில் அசைக்க முடியாத ஆளும் கட்சியாக இருக்கிறது. தெலுங்கானாவுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே ஆட்சி அமைக்கும் என்பது ஆரூடம்.

தெலுங்கானாவை தாண்டி, தேசிய அரசியலிலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டி வருகிறார். பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டினார். பின்னர் இந்த முயற்சி தடைபட்டது. இதனால் பாஜகவின் பி டீம் என்கிற விமர்சனத்தை சந்திரசேகர ராவ் எதிர்கொண்டார்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் வகையில் மீண்டும் பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இறங்கினார் சந்திரசேகர ராவ். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என பலரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தேசிய அளவிலான அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக சந்திரசேகர ராவ் அறிவித்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்கள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்படவில்லை. இதனால் மாற்று அரசியல் கட்சியின் தேவை இருக்கிறது என்கின்றனர்.
பாரத் அல்லது பாரதிய ராஷ்டிரி சமிதி என்ற பெயரில் தேசிய கட்சியை சந்திரசேகர ராவ் அறிவிக்க உள்ளார். டெல்லியில் நாளை தசாரா விழாவின் போது இந்த புதிய தேசிய கட்சியின் பெயரை சந்திரசேகர ராவ் அறிவிப்பார். இப்புதிய கட்சியின் சின்னம், தெலுங்கானாவை மையப்படுத்தியதாக இருக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications