மீண்டும் மீண்டுமா? தெலுங்கானாவில் பிரதமர் மோடி.. 5வது முறையாகப் புறக்கணித்த முதல்வர் கேசிஆர்!
ஹைதராபாத் : தெலுங்கானாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கச் செல்லாமலும், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்காமலும், அவரை 5வது முறையாகப் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை வருவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பரேட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

எய்ம்ஸ் பீபிநகர் மற்றும் ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும், ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். தெலுங்கானாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவிற்கு வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் கேசிஆர் நேரில் சென்று வரவேற்காமலும் புறக்கணித்துள்ளார்.

ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர் வரவேற்றனர். தெலங்கானா வருகை தந்த பிரதமரை வரவேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் புறக்கணித்துள்ளார்.

மத்திய பாஜக அரசை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை புறக்கணிப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 5 முறை தெலுங்கானாவுக்குச் சென்றுள்ளார். ஒரு முறை கூட பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் வரவேற்க நேரில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications