டெல்லி கோட்டையை உடைக்க தயார்! மோடியை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்போம்.. தெலங்கானா முதல்வர் கேசிஆர்
ஹைதராபாத்: பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சாடி வரும் நிலையில், மோடியை ஆட்சியில் இருந்து விரட்டியடிப்போம் என்று மீண்டும் தாக்கி பேசியுள்ளார்.
மாநில நலன்களையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சில மாநிலங்கள் கூறி வருகிறது. மேலும், மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க முதல்வர்கள் இது குறித்து வெளிப்படையாகவே மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் தெலங்கானா முதல்வரும் இணைந்து கொண்டார்.

முதல்வர் கேசிஆர்
கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடியை அவர் தொடர்ந்து சாடி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க திரிணாமுல் முயன்று வரும் சூழலில், அதற்கும் கூட தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆதரவு அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்பூர் என்ற இடத்தில் பேசிய அம்மாநில முதல்வர் கேசிஆர், மீண்டும் பிரதமரை நேரடியாகத் தாக்கி பேசினார்.

மோடியை விரட்டியடிப்போம்
யஷ்வந்த்பூர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் கேசிஆர், "தேசிய அரசியலில் டெல்லி கோட்டையை உடைக்க தயார். தேசிய அளவிலான எந்தவொரு திட்டத்தையும் தெலங்கானாவுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளைக் கூட தரவில்லை. நீங்கள் தெலங்கானா வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியடித்து, எங்களுக்கு உதவும் அரசைக் கொண்டு வருவோம்.

டெல்லி கோட்டை
மத்திய அரசு இப்போது முன்மொழிந்த மின் சீர்திருத்தங்களை தெலங்கானா அரசு நிச்சயம் செயல்படுத்தாது. தேவைப்பட்டால், தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக நமது நாட்டிற்காகப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும். மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தால் போதும், டெல்லி கோட்டையை உடைக்க நான் தயாராக இருக்கிறேன், நரேந்திர மோடி கவனமாக இருங்கள். இங்கு யாரும் உங்களைக் கண்டு அஞ்சவில்லை.

விவசாயிகள் வருமானம்
பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றார். ஆனால், எரிபொருள் மற்றும் உர விலை உயர்வு என விவசாயிகளின் முதலீடு தான் இரட்டிப்பாகி உள்ளது. ஜங்கானில் சில பாஜகவினர் டிஆர்எஸ் தொண்டர்களைத் தாக்கியதாகக் கேள்விப்பட்டேன். எனது கட்சி தொண்டர்கள் மீது யாராவது கைவைத்தால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலித் உதவும் திட்டங்கள்
தலித் பந்து திட்டத்தை விரைவில் தெலங்கானாவில் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடங்க ₹ 10 லட்சம் வழங்கப்படும். இப்படி இந்த ஆண்டு மட்டும் 40,000 தலித்துகளுக்கு நிதி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு "தலித் பந்து" வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications