ஈஸியாலாம் ஜெயிக்க முடியாது.. தெலங்கானாவில் காங்கிரஸை மிரட்டும் பிஆர்எஸ்! பரபர கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் ஜெயிப்பது சுலபமல்ல. பிஆர்எஸ் கட்சி கடும் போட்டியை வழங்கும். அதோடு மெஜாரிட்டிக்கு இரு கட்சிகளும் போராட வேண்டும் என Spick Media Network கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிந்து 2014ல் புதிய மாநிலமாக தெலங்கானா உருவானது. 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வரானார்.

இந்நிலையில் தான் 3வது முறையாக நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்த ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுள் அறிவிக்கப்பட உள்ளது. தெலங்கானாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு நான்கு முனை போட்டி உள்ளது. சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் பிஆர்எஸ்-காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி உள்ளது. இந்த 2 கட்சிகளில் ஒன்று தான் தெலங்கானாவில் வெற்றி பெறும் என பல கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் தான் நேற்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. Spick Media Network சார்பில் தெலங்கானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு சட்டசபை தான் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி ஆளும் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 42.52 சதவீத ஓட்டுக்கள் பெற்று 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 40.67 சதவீத ஓட்டுக்களுடன் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பாஜகவின் என்டிஏ கூட்டணி 8.90 சதவீத ஓட்டுகள் பெற்று 5 தொகுதிகளை கைப்பற்றும். அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5.68 சதவீத ஓட்டுகள் பெற்று 6 தொகுதிகளை வெல்லும் என Spick Media Network கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த கருத்து கணிப்பில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஏஐஎம்ஐ என 4 கட்சிகளுக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனவும், தொங்கு சட்டசபை தான் அமையும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications