தெலுங்கானாவில் கேசிஆர் vs காங்கிரஸ்.. தனிப்பெரும்பான்மை யாருக்கு.. பாஜக படுதோல்வி! புது சர்வே
ஹைதராபாத்: இந்தாண்டு இறுதியில் நடைபெறும் தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறித்த புது சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் பாஜகவும் மற்றொரு பக்கம் இந்தியா கூட்டணியும் தேர்தல் சார்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு இந்தாண்டு 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 மாநில தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா: இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டது. இதில் சத்தீஸ்கரைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் டிச. 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் தென்மாநிலமான தெலுங்கானாவில் நவ.30ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்களில் வெல்ல வேண்டும். இப்போது அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த முறை காங்கிரஸில் இருந்து போட்டி கடுமையாக இருக்கிறது.
பெரும்பான்மை யாருக்கு: இதற்கிடையே இந்தத் தேர்தலில் யார் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 119 இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று ஜன்மத் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் 60 முதல் 62 இடங்களில் வெல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கட்சியால் இந்த முறை 44-46 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த இரு தேர்தல்களில் அங்கே பிஆர்எஸ் கட்சி வென்று ஆட்சியை அமைத்த நிலையில், இந்த முறை அவர்கள் வெல்ல வாய்ப்பில்லை என்று ஜன்மத் சர்வே கூறியுள்ளது.
பாஜக: இதன் மூலம் அங்கே இருமுனை போட்டி தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கே கடந்தாண்டில் மளமளவென வளர்ந்த பாஜக தனது இடத்தை இழந்துவிட்டது. உட்கட்சி சிக்கல் தொடங்கிப் பல காரணங்களால் பாஜக தெலுங்கானாவில் ரேஸிலேயே இல்லை. அங்கே பாஜகவால் அதிகபட்சம் 5 முதல் 6 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி ஒல்ட் ஹைதராபாத் பகுதியில் வலுவாக இருக்கும் நிலையில், அவர்கள் இந்த முறை 6 முதல் 7 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல அங்கு மாநிலத்தில் இருக்கும் இதர கட்சிகள் 2,3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த 2018இல் தெலுங்கானாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கேசிஆர் கட்சி 88 இடங்களில் வென்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து காங்கிரஸ் கட்சி அங்கே 19 இடங்களில் வென்றது. ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி 7 இடங்களில் வென்ற நிலையில், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications