திடீரென இடிந்து விழுந்த குகை.. 7 தொழிலாளர்களின் கதி என்ன? தெலுங்கானாவில் பரபரப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் அருகே ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் குகையின் மேற்புறம் சுமார் 3 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்தது. இதனால் குகையின் உள்ளே பணியாற்றி வரும் 7 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது.

டோமலாபெண்டா பகுதியில் உள்ள குகை கால்வாயில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 50 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கால்வாய் குகையின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென்று இடிந்து விழுந்தது. இதையடுத்து குகையின் ஒருபகுதியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இன்னொரு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கி கொண்டனர். மொத்தம் 43 தொழிலாளர்கள் வெளியே வந்த நிலையில் 7 தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில் தொழிலாளர்கைள பத்திரமாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, ஆலோசகர் ஆதித்யநாத் தாஸ் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதுபற்றி நாகர்கர்னூல் எஸ்பி வைபவ் கெய்க்வாட் கூறுகையில், ‛‛ஸ்ரீசைலம் அணையின் அருகே இடதுகரை கால்வாய் குகையில் 4 நாட்களுக்கு முன்பு பணி தொடங்கியது. இன்றைய பணியின்போது குகையின் 14 கிலோமீட்டர் தூரத்தில் 3 மீட்டர் பரப்பில் இருந்த மேற்புறம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இது நீர்ப்பாசனத்துறையின் திட்டமாகும். மீட்பு குழுவினர் உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் வெளியே வந்தவுடன் தான் முழுவிபரம் தெரியவரும்'' என்றார்.
இந்த பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம் அளித்த தகவலின்படி மொத்தம் 50 தொழிலாளர்கள் பணி செய்தனர். 43 தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். 7 பேர் சிக்கி உள்ளனர்'' என்றார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications