விண்வெளியில் டிராபிக் ஜாம்.. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் தாமதம்.. இஸ்ரோ தலைவர் சொன்ன காரணம்
ஹைதராபாத்: இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்த பிஎஸ்.எல்.வி.சி 60 ராக்கெட்டை இரண்டு நிமிடங்கள் தாமதமாக இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. விண்வெளியில் டிராபிக் ஜாம் எனப்படும் செயற்கைகோள்கள் குறுக்கீடு காரணமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று 'ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய விண்கலன்களை விண்ணில் செலுத்த உள்ளது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.

2 நிமிட தாமதம் ஏன்?
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'SpaDeX' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி துறையில் மிகவும் முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இன்று விண்ணில் ஏவுவதற்கான ராக்கெட் புறப்படுவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
இன்று இரவு 9.58 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.. ஆனால் இன்று காலை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் ராக்கெட் விண்ணில் 10 மணிக்கு ஏவப்படும் என்று கூறியிருந்தது. திடீரென ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான நேரம் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ள நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் விளக்கம்
பிஎஸ் எல்.சி.வி சி -60 ராக்கெட் இன்று 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென 2 நிமிடம் விண்ணில் ஏவும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், "அதே சுற்று வட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருப்பதால் விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.
விண்வெளி டிராபிக் என்று சொல்லப்படும் இதுபோன்ற காரணங்களால் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே,இதுபோன்று பலமுறை இப்படி கடைசி நேரத்தில் விண்ணில் ஏவப்படும் நிகழ்வு ஒத்திவைக்கபட்டுள்ளது.
7 ஆயிரம் ஸ்டார்லிங்க் சேட்டிலைட்கள்
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட்கள் இன்று குறுக்கிடுவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாகவே ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புவியின் கீழ் வட்டப்பாதையில் சுமார் 7 ஆயிரம் ஸ்டார்லிங்க் சேட்டிலைட்கள் சுற்றி வருகின்றன. இவை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் சேட்டிலைட் மூலமாக இணைய சேவையை உலகம் முழுக்க வழங்கி வருகிறது. ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும்.












Click it and Unblock the Notifications