ஒரே நேரத்தில் 3 பூரிகளை சாப்பிட முயன்ற 6ம் வகுப்பு மாணவன்.. மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழப்பு!
ஹைதராபாத்: 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ற நிலையில், அவனுக்கு எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனுக்கு ஏன் இப்படி நடந்தது. இதை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சாப்பிடும் போது நாம் கவனமாகவும் பொறுமையாகவும் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படலாம். அப்படியொரு மோசமான சம்பவம் தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

என்ன நடந்தது: அங்கு செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மதியம் வழக்கம் போல வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் திடீரென மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்த சிறுவன் ஆறாம் வகுப்பு படிக்கும் வீரேன் ஜெயின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மதிய உணவுக்கு அந்த சிறுவன் வீட்டில் செய்த பூரிகளை எடுத்து வந்துள்ளான். ஒரே நேரத்தில் அந்த மாணவன் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த பூரி மூச்சு குழாயை அடைத்துவிடவே மூச்சு விட முடியாமல் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
போலீஸ் தகவல்: இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், "சிறுவன் மதிய உணவுக்கு வீட்டில் இருந்து பூரிகளை கொண்டு வந்துள்ளான். ஒரே நேரத்தில் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ற போது திடீரென மூச்சு திணறி இருக்கிறது. இதனால் சிறுவன் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தான்" என்றார்.
பூரிகள் அடைத்ததால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டான்.. அதைக் கவனித்த பள்ளியில் வேலை செய்து வந்த ஊழியர்கள் உடனடியாக அவனை அருகே உள்ள கிளின்க்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
பரிதாபமாகப் பலி: இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாகச் சிறுவனின் தந்தை கூறுகையில், "மதியம் பள்ளியில் இருந்து கால் வந்தது. எனது மகன் ஒரே நேரத்தில் 3 பூரிகளைச் சாப்பிட முயன்றதாகவும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். நான் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால், அதற்குள் எனது மகன் உயிரிழந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்" என்றார்.
கவனம்: உணவு அல்லது வேறு எதாவது பொருள் தொண்டை அல்லது சுவாசக் குழாயை அடைக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், உணவை வேகமாகச் சாப்பிடும் போதும், உணவைச் சரியாக மென்று சாப்பிடாமல் விட்டாலும் இது போல நடக்கும். இப்படி நடக்கும் போது சரியான நேரத்தில் சிகிச்சை தரப்படவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும். இதுபோன்ற சூழலில் மூளை செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படும்.
சாப்பிடும் போது பேசவோ சிரிக்கவோ வேண்டாம்.. ஒழுங்காக மென்று சாப்பிடுங்கள்.. மெல்லாமல் சாப்பிடும் போது தான் அது உங்கள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் சாப்பிடும் போது நிச்சயம் பக்கத்தில் இருந்து கவனியுங்கள்.












Click it and Unblock the Notifications