மட்டன் இல்லையா? கொந்தளித்த மாப்பிள்ளை வீட்டார்.. குலுங்கிய திருமண வீடு.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
ஐதராபாத்: பெண் வீட்டில் வைக்கப்பட்ட உணவு விருந்தில் மட்டன் எலும்பு குழம்பு வைக்காததால் கோபம் அடைந்த மணமகன் வீட்டினர் திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பம் தெலுங்கனாவில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
திருமணத்தை பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். என்னதான் பார்த்து பார்த்து கல்யாண ஏற்பாடுகளை செய்தாலும் உற்றார் உறவினர் யாராவது ஒருவர் மனம் கோணாமல் கூட திருமணத்தை நடத்துவது என்பது குதிரைக் கொம்பு கதைதான். திருமண வீட்டில் எதாவது சின்ன சின்ன மனக்கசப்புகள் எல்லாம் நடப்பது சர்வ சாதாரணம் தான் அதில் பெரிதாக வியப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால், பந்தியில் மட்டன் குழம்பு இல்லை என்பதற்காக திருமணத்தையே நிறுத்தினார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள நிசாம்பாத் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நஹ்டியா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடத்தி வைக்க பெரியோர்கள் பேசி முடிவு செய்தனர்.
இழிவுபடுத்தி விட்டார்கள்: இதன்படி, நிச்சயதார்த்தம் பெண் வீட்டில் நடைபெற்றது. மணமகன் வீட்டில் இருந்து வந்தவர்களுக்கு தடல் புடலாக அசைவ விருந்தை பெண் வீட்டினர் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் அசைவ விருந்தில் மட்டன் குழம்பு இல்லையே என்று மாப்பிள்ளை வீட்டினர் சொல்லியிருக்கின்றனர். இதனால் பெண் வீட்டினருக்கும் மாப்பிள்ளை வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கை கலப்பு ஏற்படும் சூழல் வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்த பிறகு அங்கு நிலைமை சற்று தணிந்தது. போலீசார் இரு வீட்டினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், எங்களுக்கு வேண்டும் என்றே மட்டன் குழம்பு வைக்காமல் இழிவு படுத்திவிட்டதாக ஆவேசமாக பேசிய மணமகன் வீட்டினரோ இந்த திருமணம் வேண்டாம் என்று அறிவித்தனர்.
திரைப்படத்தை போல: கடந்த மார்ச் மாதம் வெளியான பாலகம் என்ற பிரபல தெலுங்கு படத்தில் இதேபோன்ற ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். மட்டன் குழம்பு வைக்காததால் திருமணமே நின்று விடும். அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பையும் வியப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications