மீண்டும் பாஜக உடன் கை கோர்க்கும் சந்திரபாபு நாயுடு? வந்து விழுந்த கேள்வி! நாலே வரியில் நறுக் பதில்
ஹைதராபாத்: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் பாஜக கூட்டணிக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு சந்திரபாபு நாயுடு நறுக்கென நாலே வரியில் பதிலளித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

ஆந்திராவில் இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. சந்திரபாபு நாயுடு இப்போதே ஆந்திராவில் ஜெகன் அரசைத் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடு: இதற்கிடையே சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து சந்திரபாபு நாயுடுவே முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தவர் தான்.. அவர் கடந்த 2018ஆம் ஆண்டில் தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். கூட்டணியில் இருந்து வெளியேறியதும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் விஷன்-2047 ஆவணத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். இந்தச் சூழலில் தான் மீண்டும் பாஜக கூட்டணியில் சந்திரபாபு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களை இரண்டு தரப்புமே மறுக்கவில்லை என்பதால் இது அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
என்ன சொன்னார்: இது குறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு, "சரியான நேரத்தில் இது தொடர்பாகப் பேசுவேன்.. இது குறித்துப் பேச இது சரியான நேரம் இல்லை... 2024ஆம் ஆண்டு தேர்தல் நடக்கும் நிலையில், அப்போது தேசிய அரசியலில் அவரது பங்கு முக்கியமாக இருக்கும்.. இருப்பினும், எனது முன்னுரிமை என்பது எப்போதுமே ஆந்திரப் பிரதேசம் தான்.. நான் ஆந்திராவுக்குத் தான் முக்கியத்துவம் தரப் போகிறேன்.. மாநிலத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று மட்டும் அவர் தெரிவித்தார்.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியது. என்டிஏ கூட்டணி ஆரம்பித்த போதே இந்தக் கூட்டணியில் இருந்தவர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகன் மீது தாக்கு: ஆந்திரா பிரிக்கப்பட்ட போது தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானா வசம் சென்ற நிலையில், அமராவதியை புதிய தலைநகராக அறிவித்தார் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு.. இருப்பினும், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெகன் தலைநகர் விஷயத்தில் பல முடிவுகளை மாறி மாறி எடுத்தார். இறுதியில் மாநில தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அறிவித்தார். சட்டசபையில் எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சந்திரபாபு நாயுடு, "ஜெகன்மோகன் ரெட்டி தலைநகர் விஷயத்தில் மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்.. நாங்க அமராவதியைத் தலைநகராக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.. ஆந்திரப் பிரதேசத்திற்கு உலகத் தரம் வாய்ந்த தலைநகரை நாங்கள் திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் இருந்ததை அப்படியே அமராவதிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தோம். ஆனால், இப்போது ஜெகன் தப்பான முடிவுகளை எடுக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications