ஆந்திராவில் ஆடி அட்டகாசம்! மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! இன்னைக்கு ஒரு புடி!
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை செய்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். அந்த விருந்தோம்பலை பார்த்து மாப்பிள்ளை திக்குமுக்காடிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரியின் தாய் வீட்டில் விருந்து வைத்துள்ளனர். இதில் ரவி தேஜாவுக்கு அவருடைய மாமியார் 100 வகையான பச்சரிசி உணவுகளை தயார் செய்து பரிமாறியுள்ளார்.
100 வகையான உணவுகளுக்கு முன்பு உட்கார்ந்திருத்த தம்பதிக்கு சக்லி முதல் மைசூர் பாக் வரை பரிமாறப்பட்டது. ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவசாயிகள் புதிய பயிர் வளர்ப்புகளில் ஈடுபடுவார்கள். நீர் நிலைகள் நிரம்பி பூமி செழிக்கும் மாதமாகவும் இந்த மாதம் பார்க்கப்படுகிறது. 100 வகையான பிரம்மாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவி தேஜா, இனிப்பு, காரம் என 100 வகை உணவுகளை ஒரே நேரத்தில் கண்டது மகிழ்ச்சி என்றார்.

அந்த உணவுகளை பார்க்கும் போது எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை. இது வெறும் ஸ்னாக்ஸ் மற்றும் இனிப்பு போல் தெரிகிறது. மெயின் டிஷ் வேற இருக்கும் போலயே! கடந்த முறை இதே போல் ஒரு குடும்பத்தில் 379 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்கு பரிமாறி மாமியார் குடும்பத்தினர் அசத்திவிட்டனர். இது பொங்கல் எனப்படும் சங்கராந்திக்கு இந்த விருந்து படைக்கப்பட்டது.
அதில் 40 வகையான சாதங்கள் , 20 வகையான ரொட்டிகள், 40 வகையான கிரேவிகள், 40 வகையான வற்றல்கள், 90 முதல் 100 இனிப்பு, 70 வகையான குளிர்ந்த பானங்கள், சூடான பானங்கள் என உண்பதற்கு நிறைய இருந்தது.












Click it and Unblock the Notifications