திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிறுமி பலாத்காரம்: கட்சித் தலைவரின் தம்பி கைது
பர்த்வான்: மேற்கு வங்காளம் மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூர் நகரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் 12 வயது சிறுமி, அக்கட்சியின் தலைவர் பாபு மொண்டாலின் சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி சுனில் யாதவ் தெரிவித்துள்ளதாவது: சிட்டி சென்டர் பகுதியில் சிறுமி தனது உறவினர்களுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த போலா சிறுமியின் வாயை மூடி, அருகே இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு தூக்கி சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சிறுமியின் அழுகையை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் போலாவை கடுமையாக தாக்கினர். இதற்கிடையே போலா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சம்பவத்தை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
இதனைத் தொடர்ந்து போலாவையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி துர்காபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.