துடித்து மடிந்த மருத்துவர்.. கொல்கத்தா மருத்துவமனை சூறை! 19 பேர் கைதாம்.. போட்டுக் கொடுத்த பேஸ்புக்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சூறையாடியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 19 பேர் கைதாகியுள்ள நிலையில், அவர்களில் 5 பேர் சமூக வலைதள பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமான கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த மாணவி கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு மரணத்தை சந்தித்திருக்கிறார் எனவும், அவரது உடலில் இருந்து 150 மில்லி கிராம் விந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நிறைய பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் வன்கொடுமை சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14ஆம் தேதி இரவு புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனையை சூறையாடியது/ சுமார் 9 மணி அளவில் அங்கு புகுந்த மர்ம நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை தாக்கியதோடு காவல்துறை வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்ட நிலையில் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவ சங்கம், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றன. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா போலீசார் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதுவரை 19 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை வாகன தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை சமூக வலைதள பதிவுகள் மூலமாகவும் சில பொதுமக்கள் அந்த பதிவுகளில் காட்டிய அடையாளத்தை வைத்தும் ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனை தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு குறித்து யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனவும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications