தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்த ஐஐடி மாணவர்: ஒரே மாதத்தில் 2வது மர்ம சாவு
கான்பூர்: கான்பூரில் உள்ள ஐஐடியில் படித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநில மாணவர் சாய்குமார் ரெட்டி ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி. சாய்குமார் ரெட்டி(19). அவர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் இரண்டாம் ஆண்டு பி.டெக். படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள அன்வர்கஞ்ச்-மந்தனா தண்டவாளம் அருகே ரெட்டி பிணமாகக் கிடந்ததை போலீசார் நேற்று காலை கண்டுபிடித்தனர்.
தலையில் அடிபட்டதால் அவர் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி பேராசிரியர் ஏ.கே. கோஷ் கூறுகையில்,
ரெட்டியின் உடல் துண்டுகளாக ஆகவில்லை. அவர் எதிர்பாராவிதமாக ரயிலில் அடிபட்டிருக்கலாம். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ஒரு தாபா உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
புத்தாண்டையொட்டி கடந்த 31ம் தேதி நள்ளிரவில் மாணவர்கள் பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளனர். அந்த பார்ட்டியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளனர். ரெட்டியும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த மாதம் 1ம் தேதி இதே கல்லூரியில் எம்.டெக். படித்து வந்த மோஹித் குமார் ஆர். போஹதே வளாகத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றும், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications