ஆந்திரா என்கவுன்ட்டர்: போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய தமிழர்களின் கதி என்ன?
சித்தூர்: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாகக் கூறி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர், பலர் தப்பியோடிவிட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் செம்மரம் வெட்டி கடத்தி வருவதாக அம்மாநில போலீசார் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக இதுவரை பல தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திகிரி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செம்மரக் கடத்தலில் ஈடுபட்டோர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றுள்ளது.
இதில் 20 செம்மரக் கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர். போலீஸ் தரப்பில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். பலியான 20 பேரில் இரண்டு பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது சந்திகிரி பகுதியில் 80 கடத்தல்காரர்கள் இருந்துள்ளனர். சித்தூர் மற்றும் நெல்லூர் வனபப்பகுதிகளில் செம்மரம் கடத்துவதை தடுத்து நிறுத்த சிறப்பு குழுக்கள் அண்மையில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் செம்மரம் வெட்டுபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications