வடக்கில் இன்று பெரிய சம்பவம் இருக்கு.. குர்மி மக்கள் மறியல்! 3 மாநிலங்களில் 20 ரயில் சேவை ரத்து
ராஞ்சி: ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலத்தில் அதிகளவில் வசித்து வரும் குர்மி சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முதல் 3 மாநிலங்களில் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளதால் 20 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய மாநிலங்களில் குர்மி சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்து வரும் தங்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதேபோல், இந்த சமூகத்தினர் பிரத்யேகமாக பேசி வரும் குர்மலி மொழியையும் இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என இவர்கள் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான், தங்களின் இந்த தொடர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளன.
குர்மி அமைப்பான டோட்டெமிக் குர்மி விகாஷ் உள்ளிட்ட இயக்கங்கள், பல்வேறு மாநிலங்களில் உள்ள குர்மி சமூக அமைப்புகள் இணைந்து இன்று முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்து இருக்கின்றன. குறிப்பாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டோட்டெமிக் குர்மி விகாஷ் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஷீத்தல் ஓதார் தெரிவிக்கையில், "மேற்கு வங்க மாநிலத்தில் குஸ்தார், கெமசுலி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முரி, நிம்தி, காக்ரா, கோமோ, ஒடிசா மாநிலத்தில் தன்பூர், ஹரிசந்தன்பூர், ஜரைகேலா ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்." என அவர் கூறி உள்ளார்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த ரயில் மறியல் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்து இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாநிலங்களில் குறைந்தபட்சம் 20 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. 47 ரயில்கள் திருப்பி விடப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு கருதி 3 மாநிலங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications