உ.பி.: 22 வயது பெண் முன்னாள் காதலர் உள்பட 4 பேரால் ஓடும் காரில் பலாத்காரம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் 22 வயது பெண்ணை 4 பேர் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இது குறித்து கேட்டால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மீடியாக்கள் மீது பாய்கிறார். இந்நிலையில் மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் வசுந்தரா செக்டர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் கடந்த திங்கட்கிழமை இரவு 4 பேரால் கடத்தப்பட்டுள்ளார். அவர்கள் அந்த பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அப்பெண்ணை நொய்டா செக்டர் 62 என்ற இடத்தில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றனர்.
அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரை கடத்தி பலாத்காரம் செய்த நான்கு பேரில் ஒருவரான அகில் தோமார் அப்பெண்ணின் முன்னாள் காதலர் ஆவார்.
முன்னதாக அகில் தோமார் மீது அந்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.