டெல்லியில் 255 வழிகள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!
டெல்லி: டெல்லியில் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் உணவகங்கள் அருகே உள்ள 255 வழிகள் பெண்களுக்கு ஆபத்தானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் எல்.சி. கோயல் தலைமையில் அண்மையில் டெல்லியில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். டெல்லியில் பெண்கள் அடிக்கடி செல்லும் பொழுதுபோக்கு இடங்கள், உணவகங்களுக்கு அருகே உள்ள 255 வழிகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றவை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த வழிகளில் போலீசார் எப்பொழுதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருட்டான இடங்களில் விளக்குகள் பொருத்தவும், வாகனங்கள் நிறுத்துமிடம், ஷாப்பிங் மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் விரைவில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. குழந்தைகளை அழைத்து வரும் தனியார் வாகன ஓட்டிகள் குறித்து விவரங்களை சேகரிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் வாகன ஓட்டிகளின் நடத்தை பற்றி போலீசாரிடம் விசாரித்து அறிக்கை பெறுமாறு குழந்தைகளின் டைரியில் எழுதி பெற்றோருக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகன ஓட்டிகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளனர்.
டெல்லி போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு என தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மூலம் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 947 பேர் பயன் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications