2ஜி முறைகேட்டில் முக்கிய சதிகாரர் ஆ.ராசாதான்: சிபிஐ
டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாதான் முக்கிய சதிகாரர் என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதித் தரப்பு வாதங்களை சிறப்பு அரசுதரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் எடுத்துரைத்தார். அதில், ‘தொடக்கத்திலிருந்தே குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு சார்பாகவே ஆ.ராசா செயல்பட் டதாகவும், அலைக்கற்றை உரிமங்களை இந்த நிறுவனங்களுக்கு வழங்க அனைத்து வகையான தந்திரோபாயங்களும் திட்டமிடப்பட்டவையே' என்றார் ஆனந்த் குரோவர்.

மேலும், ‘குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட முதலில் விண்ணப்பங்கள் வரவேற்கும் கடைசி தேதியை அக்டோபர் 10, 2007 என்பதிலிருந்து அக்டோபர் 1, 2007 என்று மாற்றினார். இதன் மூலம் 575 விண்ணப்ப நிறுவனங்களில் 408 நிறுவனங்கள் போட்டியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது" என சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியின் முன்னிலையில் தெரிவித்தார் குரோவர்.
இந்த விவகாரத்தில் அப்போதைய பிரதமரின் கவலைகளைத் தணிக்கும் விதமாக அவருக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறையான முதல் விண்ணப்பம், முதல் சேவை அடிப்படையிலேயே உரிமங்கள் வழங்கப்படுவதாகவும் இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல்களை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனையடுத்து சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதல் பெற்றதான அவரது வரைவு செய்தியாளர்களுக்கான அறிக்கையும் போலியாக தயாரிக்கப்பட்டதே என அவர் வாதிட்டார்.
இதேபோல், நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டன, இதில் முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெஹூரா, மற்றும் ஆ.ராசாவின் தனிப்பட்ட செயலர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தயாரித்த ஸ்லிப் ஒன்றின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
4 கவுண்ட்டர்களின் அமைப்புகளும் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு நியாயமற்ற முறையில் சாதகம் வழங்குவதற்கான முறையில் அமைந்திருந்தது. யார் வரிசையில் உள்ளனர், எந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தனர்' என குரோவர் வாதிட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக செப்டம்பர் 10-ம் தேதி மேலும் வாதங்கள் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications