ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணை செப்.17-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: தயாநிதி, கலாநிதி மாறன்களுக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணையை வரும் 17-ந் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளுக்கான டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு மீதும் நீதிபதி ஓபி ஷைனி விசாரணை நடத்தியிருந்தார்.
இம்மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி ஷைனி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை வரும் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications