2ஜி வழக்கு: 'குற்றம்சாட்டப்பட்டவர்' மீது புதிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரிய சி.பி.ஐ.!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் 'குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர்' வழக்கு விசாரணையில் தலையிட முயன்றதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் சி.பி.ஐ. கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த புதிய நிலவர அறிக்கையை சி.பி.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ரகசிய உறைக்குள் வைத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

அப்போது தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் முன் அந்த அறிக்கையின் குறிப்பிட்ட ஒரு பகுதியை வேணுகோபால் வாசித்துக் காட்டினார்.
அப்போது வழக்கறிஞர் வேணுகோபால் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு நபர், வழக்கு விசாரணையில் தலையிட முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரின் செயல்பாடுகளை மூடி மறைக்க அவர் முயன்றார்.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிநாடா ஒன்று சி.பி.ஐ-க்கு கிடைத்துள்ளது. அது உண்மையான ஒலிநாடாதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஒலிநாடா மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த அந்த நபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக லஞ்சம் தர முயன்றது தெரிய வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 120 பி (குற்றவியல் சதி), 193 (தவறான ஆதாரம் அளித்தல்), 201 (ஆதாரங்களை அழித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதியளிக்க வேண்டும்.
இதில் தொடர்புடைய நபர்கள் மீது ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீதுள்ள வழக்குகளில் இதுவும் சேரும்.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தாமலேயே, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்க முடியுமா? என்று சி.பி.ஐ, தரப்பிடம் கேட்க விரும்புகிறோம் என்றனர்.
அதற்கு பதிலளித்த வேணுகோபால், குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக புதிய வழக்கைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்றார். இதையடுத்து இதுதொடர்பான விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கனிமொழி, ஜாபர்சேட்?
உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அனுமதி கோரிய 'குற்றம்சாட்டப்பட்ட நபர்' தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழிதான் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் கனிமொழி, ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல்களை முன்வைத்துதான் சி.பி.ஐ. புதிய வழக்கு தொடர இருப்பதாக மற்றொரு ஆங்கில ஊடகமான டி.என்.ஏ.இண்டியா பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications