ஒரு யூனிட் ரூ. 5,000... ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் ரத்தம் விற்ற கும்பல் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான ரத்தத்தை அதிக விலைக்கு விற்ற கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனை. இங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான ரத்தத்தை ஒரு கும்பல் அநியாய விலையில் விற்பதாக அம்மாநில போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அந்த மருத்துவமனையின் தீப்புண் சிகிச்சைப் பகுதியை ரகசிய போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, ரத்தக் கொடையாளர்கள் சிலருடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு கும்பல் நோயாளிகளின் தேவைக்கேற்ப ரத்தத்தை விற்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அக்கும்பலைச் சேர்ந்த 3 பேரை மோட்டிடுங்கரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு யூனிட் ரத்தத்தை ரூ. 5 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் ரத்தம் அதிக விலைக்கு விற்கப் பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications