சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட மேலும் 3 பேர் கைது
சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட மேலும் 3 பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புக்கான கணித பாட வினாத்தாளும், 12ஆம் வகுப்புக்கான பொருளியல் பாட வினாத்தாளும், வாட்ஸ்-ஆப் மூலம் முன்கூட்டியே வெளியானதை அடுத்து அந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் சத்ரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஸ்டடி விஷன் என்ற பயிற்சி மையத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அத்துன் வினாத்தாளை வாட்ஸ்ஆப் குழு மூலம் பகிர்ந்ததாக, 10ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டெல்லி குற்றப்பிரிவு போலீசார், 60க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.
அவர்களில் 2 ஆசிரியர்களையும், தனியார் பயிற்சி மைய உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கிடைத்த வினாத்தாளை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர்கள், அதை வாட்ஸ் ஆப் மூலம் தனியார் பயிற்சி மைய உரிமையாளருக்கு அனுப்பியதும் அந்த பயிற்சி மைய உரிமையாளர் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு வினாத்தாளை அனுப்பிவைத்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த வினாத்தாள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.