நர்சரி பள்ளியில் 3 வயது சிறுமியிடம் பாலியல் அக்கிரமம்.. பெங்களூருவில் பதட்டம்
பெங்களூரு: நர்சரி பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பெங்களூருவில் இதுபோன்ற சில சம்பவங்கள் சமீப காலத்தில் அடிக்கடி நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திரா நகர் பகுதியில் 3 வயது சிறுமியை பள்ளிக்கூட வளாகத்திலேயே சிலர் பாலியல் அக்கிரமத்திற்குட்படுத்தியது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘குழந்தையின் பெற்றோர் மாலை 5 மணியளவில் சிறுமியைக் கூட்டி வந்தனர். கூடவே ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் உடன் வந்தார்.
பிற்பகல் 12.30 மணியளவில் சிறுமியை பள்ளியிலிருந்து அழைத்து வந்தபோது சிறுமி வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளாள். இதையடுத்து வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்த தாயார், வயிற்றுக்குக் கீழே சிறுமியின் மர்மப் பகுதியில் காயம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்து விட்டு இங்கு அழைத்து வந்தனர். பரிசோதனைகள் நடந்துள்ளன' என்றார்.
இந்தச் சிறுமியின் தந்தை ஹோட்டலில் பணியாற்றுகிறார். இவர்களது வீடு கிழக்கு பெங்களூருவில் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சதீஷ் குமார் கூறுகையில், ‘இது தொடர்பாக புகார் வந்துள்ளது. சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, யார் இந்த காரியத்தைச் செய்தது என்று கேட்டபோது அங்கிள், ஸ்கூல் என்று மட்டுமே கூறுகிறாள். வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அழுதபடி இருக்கிறாள். மருத்துவப் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.
இதற்கியடையே பள்ளி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இருப்பதால் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்று பள்ளி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
தற்போது போலீஸார், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.