பழங்குடியின காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்த பெண் உள்ளிட்ட 5 பேர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் பழங்குடியின மாணவிகள் தங்கும் அரசு காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புட்டைய்யாகுடெம் என்ற கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்காக அரசு காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு யாரோ பெயர் எழுதாமல் கடிதம் எழுதியுள்ளனர்.
இதைடுத்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது உண்மை என்பது தெரிய வந்தது.
காப்பகத்தில் தங்கியிருக்கும் மாணவிகளை அங்கு சமையல் செய்யும் சியாமளா என்பவர், 4 பேரின் துணையுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சியாமளா மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயதுக்குட்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications