இந்திய மக்கள்தொகையில் 38% பேர்.. மகா கும்பமேளாவில் இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியாச்சு!
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளா நிறைவடைய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தற்போதே 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இப்போது வரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

முக்கிய நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மவுனி அமாவாசை தினத்தில் 8 கோடி பக்தர்களும், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், ஜனவரி 30 அன்று 1.7 கோடி பேரும், பிப்ரவரி 1 அன்று 2 கோடி பேரும் புனித நீராடினர்.
பிப்ரவரி 2 ஆம் தேதியான வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பேரும், மாக் பூர்ணிமா தினமான பிப்.12 அன்று இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்களும் புனித நீராடி உள்ளனர்.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் 38 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை புனித நீராடலில் பங்கேற்றுள்ளனர். வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்கள் எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடையும்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மகா கும்பமேளா நீட்டிக்கப்படும் என்பது உண்மை அல்ல என்றும் சுபநேரங்கள் அடிப்படையில் தான் கும்பமேளா தினங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, எனவே அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே மகாகும்பமேளா திட்டமிட்டபடி பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் முடிவடையும்' என பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர மந்தர் தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவுக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை உ.பி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications