ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த 8 ம.ஜ.த எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: தேவகவுடா அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை பெங்களூரிலுள்ள மாநில தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணான்டஸ் மற்றும் ராமமூர்த்தி ஆகிய 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் களமிறக்கப்பட்டனர். ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 45 வாக்குகள் தேவை.
40 எம்எல்ஏக்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதாதளமும் (ம.ஜ.த), சுயேச்சைகளை நம்பி பாரூக் என்பவரை தனது வேட்பாளராக களமிறக்கியது. ஆனால், பாரூக்கிற்கு, 33 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அவர் தோற்றார். பிற கட்சி வேட்பாளர்கள் எதிர்பார்த்தபடி ஜெயித்தனர்.
ம.ஜ.தவில் 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ராமமூர்த்திக்கு வாக்களித்தனர். அதேநேரம் சுயேச்சை ஒருவரின் வாக்கு ம.ஜ.தவுக்கு கிடைத்துள்ளது.
காங்கிரசுக்கு வாக்களித்ததோடு, அதை பகிரங்கமாகவே 8 எம்எல்ஏக்களும் ஒப்புக்கொண்டனர். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்டதால் அக்கட்சியின் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமை தாங்கினார். கட்சி மாறி ஓட்டுப்போட்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜமீர்அகமது கான், செலுவராயசாமி, பாலகிருஷ்ணா, இக்பால் அன்சாரி, அகண்ட சீனிவாசமூர்த்தி, கோபாலய்யா, பீமா நாயக், ரமேஷ் பன்டிசித்தேகவுடா ஆகியோரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்று தீர்மானித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருமே 2018 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜமீர் அகமது கான், செலுவராய சாமி, பாலகிருஷ்ணா ஆகியோர், கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள். நேற்றைய கூட்டத்தில் குமாரசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.