வேட்டி எப்படி கட்டுவது... ரஷ்ய தலைவரின் மனைவியை தனியாக கூப்பிட்ட ம.பி. மாஜி முதல்வர்!
டெல்லி: வேட்டி எப்படி கட்டுவது என்று சொல்லிக் காட்டுகிறேன்...தனியே வாருங்கள் என்று ரஷ்ய தலைவர் ஒருவரின் மனைவியிடம் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறியதை அவரே வெளியிட்டு தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
பொது இடங்களில் தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது இந்த புதிய சர்ச்சை
மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சரான பாபுலால் கவுர், பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது வேட்டியின் பெருமை குறித்து அவர் பேசினார்.
தான் ரஷ்யா சென்றபோது வேட்டி கட்டியிருந்ததாகவும், அதை பார்த்த ரஷ்ய தலைவர் ஒருவரின் மனைவி, வேட்டியை எப்படி கட்டுகிறீர்கள், பெல்ட்டும் இல்லாமல், ஜிப்பும் இல்லாமல் எப்படி அது இடுப்பில் நிற்கிறது என்று கேட்டதாகவும் பேசினார்.
அதற்கு, பொது இடத்தில் எப்படி வேட்டி கட்டுவது என்று கூற முடியாது என்றும், தனியாக வந்தால் எப்படி வேட்டி கட்டுவது என்று காட்டுகிறேன் என்று தான் கூறியதாகவும் கவுர் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் இந்த பேச்சு, மகளிர் உரிமை அமைப்புக்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து அவருக்கெதிராக போராட்டக் களம் இறங்க அந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன.