ஒரே வருடத்தில் 24வது தற்கொலை.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவி தற்கொலை.. கோட்டாவில் ஷாக்
கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டில் கோட்டாவில் பதிவாகியுள்ள 24வது தற்கொலை சம்பவமாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி மையங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் ராஜஸ்தான் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். ஆனால் தொடர்ச்சியாக இந்த பயிற்சி மையங்களில் தற்கொலைகள் நடந்து வருகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு அங்குஷ் ஆனந்த் (18), உஜ்வல் குமார் (17) என இரண்டு மாணவர்களும், பிரணவ் வர்மா (17) எனும் மாணவி என மூன்று பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 மாணவர்கள் தூக்கில் தொங்கியும், 1 மாணவி விஷம் குடித்தும் உயிரிழந்திருந்தார். இவர்கள் மூவர் உயிரிழப்புக்கும் காரணம் தேர்வுகள் மீதான அழுத்தம்தான் என்று சொல்லப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மட்டும் இப்படியாக 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டில் 18 மாணவர்கள், 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என தற்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தற்கொலைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று 16 வயது மாணவி ஒருவர் தனது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார். நேற்று மதியம் இவரது அறையில் வாந்தி எடுத்திருக்கிறார்.
இதை பார்த்த இவரது தோழிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மருத்துவமனையில் சுமார் 3 மணி நேரம் வரை இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவரது தற்கொலை கோட்டாவில் பதிவாகியுள்ள 24வது தற்கொலை சம்பவம் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்னர் இதேபோல 23 மாணவர்கள் 2023 ஜனவரியிலிருந்து தற்போது வரை தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவியின் அறையிலிருந்து விஷ பாட்டில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்கொலை குறிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். தொடர் தற்கொலை சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications