ஹைதராபாத் ஹோட்டலில் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.: எங்கு கிடைத்தார் தெரியுமா?
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை காணாமல் அனைவரும் பதட்டம் அடைந்துவிட்டனர்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
செல்போன்
ஹோட்டலில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் இருந்தால் பாஜகவினர் யாராவது தொடர்பு கொண்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.
எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில் ஒரு எம்.எல்.ஏ. மாயமானது தெரிய வந்தது. ஹோட்டல் முழுவதும் அவரை தேடியுள்ளனர்.
பார்
பார், கழிவறை, உணவு உண்ணும் இடம் என்று அனைத்து இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவர் ஹோட்டலில் இருந்து வெளியே சென்றாரா என்று பவுன்சர்களிடம் கூட கேட்டோம். அவர் வெளியே செல்லவில்லை என்று அவர்கள் கூறினார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீச்சல் குளம்
எங்கு தேடியும் அவரை காணவில்லையே என்றபோது அவர் நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த எம்.எல்.ஏ. நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்ய ஹோட்டலில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவரை தேடி அலைந்து டென்ஷனாகிவிட்டனர். நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பெங்களூர் வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.