40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை!
உத்தர பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஏற்பட்ட சண்டை காரணமாக பெரிய மதக்கலவரம் உருவாகி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஏற்பட்ட சண்டை காரணமாக பெரிய மதக்கலவரம் உருவாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அங்கு தினமும் 4 பேரை என்கவுண்டர் செய்து வருகிறது. இதில் பெரும்பாலான நபர்கள் முஸ்லிம்கள்.
உலகிலேயே அதிக என்கவுண்டர் நடக்கும் பகுதி தற்போதைக்கு உத்தர பிரதேசம்தான். இந்த நிலையில் அங்கு முசாபர் நகரில் கிரிக்கெட் போட்டி ஒன்றால் பெரிய கலவரம் ஏற்பட்டு இருக்கிறது.

கிரிக்கெட் போட்டி
உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் உள்ள புர் பால்யன் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சுமித் பால் என்ற 15 வயது சிறுவனுக்கும், ஆசிப் என்ற 16 வயது சிறுவனுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடும் போது சண்டை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 21ம் தேதி சண்டை ஏற்பட்டது. மிகவும் சிறிய சண்டை இது.

பிரச்சனை செய்தனர்
இந்த நிலையில் அந்த சிறுவன் சுமித் பாலின் வீட்டை சேர்ந்தவர்கள் ஆசிப் வீட்டில் சென்று இதுகுறித்து சண்டையிட்டு இருக்கிறார்கள். அதன்பின் இது இரு தரப்பினர் பிரச்சனை ஆகியுள்ளது. இந்த நிலையில்தான் அன்று இரவே இரண்டு தரப்பு மக்களும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை தீர்த்து இருக்கிறார்கள்.

வேறு ஒரு நபர் தாக்கப்பட்டார்
ஆனால் அதற்கு மறுநாளே அதே பகுதியை சேர்ந்த அபித் என்ற நபர் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் திரும்பும் போது சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார். இவரை தாக்கியது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இவரை தாக்கியது ஷாம்சேர் அகமது என்ற அவரது முதலாளிதான் என்று கூறப்பட்டு உள்ளது. இதுதான் பிரச்சனையை பெரிதாக்கியது.

போலீசுக்கு சென்றது புகார்
இதுகுறித்து இரண்டு தரப்பில் இருந்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த சமயத்தில், போலீஸ் நிலைய வாசலிலேயே இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ளது.

கலவரம் ஏற்பட்டது
இந்த நிலையில் அந்த புர் பால்யன் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. பல வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளது. பல மக்கள் காயத்திற்கு உள்ளாகி உள்ளனர். அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துள்ளது. அங்கு போலீஸ் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பிரச்சனை காரணமாக 40 இஸ்லாமியர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரை காலிசெய்துவிட்டு வெளியேறினார்கள்
இதில் சில 70 வயது முதியவர்கள் கூட கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தற்போது அந்த கிராமத்தை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேறி வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் இஸ்லாமாமியார்கள் அருகே உள்ள மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறார்கள்.

பிரச்சனை ஆன அமைச்சர் சந்திப்பு
இந்த நிலையில் முசாபர் நகர் பாஜக எம்வி சஞ்சீவ் பால்யன் அங்கு வந்துள்ளார். அவர் வருகைக்கு பின் பதற்றம் இன்னும் அதிகரித்து இருக்கிறது. இது தேசிய பாதுகாப்பிற்கு கேள்வி எழுப்புவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. அங்கு இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications