Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்தியை நிந்தித்த சாமியார்கள் - ஹரித்வாரை அடுத்து சர்ச்சையில் ராய்பூர் மத மாநாடு

Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு இறுதியில் ஹரித்வாரில் நடைபெற்ற மத மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் குறித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த ஓர் இந்து மத மாநாட்டில், மகாத்மா காந்தி குறித்த அவதூறு கருத்து முன்வைக்கப்பட்டதையடுத்து, சர்ச்சை வெடித்தது.

ஆனால், இந்த மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரும், ராய்ப்பூர் மாநகராட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான பிரமோத் துபேயின் புகாரின் பேரில், மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசிய காளிசரண் மகாராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

kalicharan

இங்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான மோகன் மர்க்காமும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரமோத் துபே பிபிசியிடம் பேசுகையில், "மேடையில் மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அவமரியாதை நாங்கள் கற்பனை கூட செய்யாதது. இது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட நிகழ்வு என்று தான் தோன்றுகிறது," என்றார்.

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாபா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மோகன் மர்க்காம் கூறினார்.

இந்த மத மாநாடு நீலகண்ட திரிபாதியின் நீலகண்ட சேவா சன்ஸ்தானால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் புரவலர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், ராய்ப்பூரின் துதாதாரி மடத்தின் மஹந்த்துமான மஹந்த் ராம்சுந்தர் தாஸ் ஆவார். ராம்சுந்தர் தாஸ் மாநில கௌசேவா ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார்.

நீலகண்ட திரிபாதி பிபிசியிடம் கூறுகையில், "இந்த மாநாட்டை நாங்கள் ஆறு அம்சங்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்திருந்தோம். இதில் பாஜக தலைவர்கள் தவிர காங்கிரஸின் பெரிய தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். சனாதானி இந்துக்கள் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டின் முக்கிய அம்சம் 'இந்து ராஷ்டிரம்' ஆகும். கருத்து சுதந்தரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இந்த மாநாட்டில் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஆனால், மகாத்மா காந்தி பற்றி கூறப்பட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என்று தெரிவித்தார்.

கோட்சேவை புகழ்ந்து காந்தியை நிந்தித்த சாமியார்கள்

இந்த இரண்டு நாள் மத மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துறவிகள் இந்து ராஷ்டிரம், இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுவது, இந்துத்துவா, மதமாற்றம் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.

பல சாதுக்களும் சிறுபான்மையினரைக் குறிவைத்துச் சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசினர்.

பல சாதுக்கள் இந்து மதத்திற்கு எழுந்துள்ள ஆபத்தைப் பற்றிப் பேசினர், அதே நேரத்தில் சில சாதுக்கள் பென்டகன் உட்பட ஐரோப்பா முழுவதும் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பாவின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்துக்களாக மாறிவிட்டதாகவும் கூறினர்.

சாத்வி விபானந்த் கிரி இடஒதுக்கீட்டையே ஒழிக்க வேண்டும் என்று வாதிட்டதுடன் 'கௌரவக் கொலை'யையும் நியாயப்படுத்திப் பேசினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியின் கடைசிச் சுற்றில், மகாராஷ்டிராவின் அகோலாவிலிருந்து வந்த காளிசரண் மகாராஜ் என்ற சாது, சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசும் போது பல சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் போஜ்பூரில் உள்ள கோயிலில் கடந்த ஆண்டு 'சிவதாண்டவ் ஸ்தோதம்' பாடி சமூக வலைதளங்களில் பிரபலமான காளிசரண் மகாராஜ், 'இந்துவின் நலன் குறித்துப் பேசுபவர் தான் நாட்டை ஆள முடியும்' என்ற முழக்கத்துடன், "நம் வீட்டுப் பெண்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், நாகரீகமானவர்கள், அவர்கள் வாக்களிக்கப் போவதில்லை.

கூட்டுப் பாலியல் சீண்டல் நடந்தால் உங்கள் வீட்டுப் பெண்கள் கதி என்ன?" என்கிறார்கள். முட்டாள்கள். நான் உங்களைச் சொல்லவில்லை, வாக்களிக்க வெளியே வராத மக்களைச் சொல்கிறேன்," என்று ஆவேசமாகப் பேசினார்.

"அரசியல் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் குறிக்கோள். அவர்கள் நம் கண் முன்னே 47-ல் அதைச் செய்தனர். இரண்டிரண்டாக நம் கண் முன்னே கைப்பற்றினர். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை நம் கண் முன் அரசியல் மூலம், அவர்கள் கைப்பற்றினர்." என்றார்

இதற்குப் பிறகு, மகாத்மா காந்தியைப் பற்றி காளிசரண் மகாராஜ், "மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மொத்தமாகச் சீரழித்தார். நாதுராம் கோட்சே வுக்கு வந்தனம். அவரைக் கொன்றதற்கு. புண்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது மிகவும் முக்கியம். இல்லையெனில் அவை புற்றுநோயாக மாறும்." என்றார்.

காளிசரண் மகராஜ் உரை நிகழ்த்திவிட்டுக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து, மாநாட்டின் புரவலரும், காங்கிரஸ் தலைவருமான மஹந்த் ராம்சுந்தர் தாஸ் தனது உரையில் மகாத்மா காந்தி குறித்த அவதூறுச் சொற்களை எதிர்த்து, அந்த மாநாட்டில் இருந்து விலகுவதாக கூறினார்.

இதையடுத்து, மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் காளிசரண் மகாராஜ் மீது போலீசில் புகார் அளித்தனர்.

இந்துத்துவா நோக்கம்

சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை அகற்றி விட்டு ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, கடந்த 3 ஆண்டுகளாக மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்னைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த மூன்று ஆண்டுகளில், பூபேஷ் பாகேலின் அரசாங்கம் 2,260 கிமீ நீளமுள்ள ராம் வனகமன் பாதை, ராமர் ரத யாத்திரை, கௌசல்யா மாதா கோயில் புனரமைப்பு, கிராம அளவிலான மாவ்னஸ் போட்டி, மாட்டு சாணம் வாங்குதல் போன்ற பல மத நம்பிக்கைகள் தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியுள்ளது.

மாட்டுச் சாணம் வாங்குவது போன்ற திட்டங்களுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க தலைவர்கள் முதலமைச்சருக்குப் பகிரங்கமாக வாழ்த்துத் தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அரசியல் வட்டாரங்களில், காங்கிரஸ் அரசு பாஜகவின் உத்திகளைத் தனதாக்கிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும், மதமாற்றப் பிரச்னையைக் கையிலெடுத்த பாஜக, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் மதமாற்றம் அல்லது மதம் தொடர்பான பதற்றமும், குழப்பமும் இல்லாமல் ஒரு மாதம் கூட கடப்பதில்லை.

கடந்த மாதம், கபீர்தாம் மாவட்டத்தில் ஒரு தூணிலிருந்து கொடி இறக்கப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், கபீர்தாமில் இந்து அமைப்புகள் 108 அடி உயர காவிக்கொடியை ஏற்றியபோது, கொடியேற்று நிகழ்ச்சிக்கு வந்த சாதுக்களை வரவேற்று காங்கிரஸ் தலைவர்கள் நாளிதழ்களில் பெரிய விளம்பரம் செய்தனர்.

ராய்பூரில் நடந்த மத மாநாட்டிலும் அரசும், காங்கிரஸ் தலைவர்களும் முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது.

நீலகண்ட சேவா சன்ஸ்தானின் நீலகண்ட திரிபாதி கூறுகையில், "நாங்கள் முதலில் சனாதன இந்துக்கள், அதற்குப் பிறகு தான் அரசியல் கட்சி. அப்படியிருக்கும் போது, இந்த நிகழ்வை, குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்துவது சரியல்ல. உதவி என்று பார்த்தால். அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது." என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+