”நீங்க 10 ரூபா கொடுத்தா போதும்” - கட்சியின் கல்லாப் பெட்டி காலி; மக்களிடம் நிதி கேட்கும் கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை நடத்த போதிய பணம் இல்லை என்று கூறி பொதுமக்களிடம் நிதி அளிக்கும்படி கேட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சி தனது அன்றாட நடவடிக்கைகளுக்கே செலவு செய்ய பணமில்லாமல் இருப்பதால் நன்கொடை வழங்கி உதவுமாறு அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சியின் பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டது. நாங்கள் கட்சியை நடத்துவதற்கு பணம் தேவை. கட்சியின் தினசரி நடவடிக்கைகளுக்கு பணம் தேவை. முதல்வராக வந்த பிறகும் கூட மக்களிடம் நன்கொடை கேட்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும்.
தவறான வழியில் அரசியலில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. எனவே நான் உங்களிடம் நன்கொடை கேட்டு நாட வேண்டியதில்லை. ஆனால், நான் அதுபோன்ற ஊழல் பாதையை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. எங்களுக்கு இதுவரை மக்களே பணம் கொடுத்து வந்துள்ளனர்.
நாங்கள் ஒருபோதும் மேசைக்கு அடியில் தெரியாமல் பணத்தை வாங்கியதில்லை. நாங்கள் வாங்கிய ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளது. நேர்மையான அரசியலை நடத்த நீங்கள் கொடுக்கும் ரூபாய்10 கூட உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் தான் சுமார் 540 கோடி ரூபாய் செலவு செய்து டெல்லி அரசின் சாதனைகளையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் பெருமையையும் சொல்லும் விளம்பரத்தை வெளியிட்டது அம்மாநில அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications