டிவி லைவ் ஷோவில் ஆம் ஆத்மி நிர்வாகியை பளார் விட்ட பா.ஜ.க பெண்: ரணகளமான விவாத நிகழ்ச்சி
டெல்லி: தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளரும், பா.ஜ.க பெண் நிர்வாகியும் அடிதடி மோதலில் ஈடுபட்டதால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வட மாநிலங்களில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இஜாஸ் கான் என்பவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டீனா சர்மா என்ற பெண்ணும் பங்கேற்றனர்.
"ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாதி ரீதியாக செயல்படுகிறாரா?" என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவரிடமும், அதற்கான ஒருங்கிணைப்பாளர் கேள்வி கேட்டார். அப்போது போது இருவரும், காரசாரமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.
காரசார விவாதம்
ஒரு கட்டத்தில் டீனா சர்மாவை, இஜாஸ் கான் தவறான வார்த்தைகளால் பேசினார். இதனால், டீனா சர்மா, கடும் கோபம் அடைந்தார்.
மன்னிப்பு கேளுங்கள்
அப்போது நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தவர், நீங்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும், அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும் கூறினார். ஆனால் அதை கான் ஏற்க மறுக்கவே ஆத்திரமடைந்த டீனா சர்மா, இஜாஸ் கான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அதிர்ச்சியில் தொகுப்பாளர்
பதிலுக்கு சர்மாவை கான் தாக்க முயற்சித்தார், இதனால், அதிர்ச்சி அடைந்த, 'நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஓடி வந்து, இருவரையும் பிரித்து விட்டனர். இந்த காட்சிகள், 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்
தொலைக்காட்சியில் இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இணைந்து விலகிய டீனா சர்மா
பா.ஜ.க.வில் இருந்து, சில மாதங்களுக்கு முன் விலகி, ஆம் ஆத்மியில் இணைந்த டீனா சர்மா, அந்த கட்சியிலிருந்து விலகி, மீண்டும், பா.ஜ.க.வில் இணைந்தார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் போக்கு பிடிக்காததால், ஆம் ஆத்மியின், டெல்லி மாநில, எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய போது, டீனா சர்மா வெளியேறி, பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணகளமாகும் நிகழ்ச்சிகள்
தனியார் தொலைக்காட்சிகள் ஏதாவது ஒரு தலைப்பினை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்துகின்றனர். பல்வேறு கட்சியினரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நேற்றைய சம்பவத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் இனிமேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க யோசிப்பார்கள் என்றே கூறப்படுகிறது.