ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்: ப.சிதம்பரம்
டெல்லி: வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருக்கும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரை
நாகரிகம் வளர்ந்த ஒரு நாட்டில் சில விஷயங்கள் இருக்கக் கூடாது.. இப்படியான ஒன்றுதான் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டம்...

8 மாநிலங்களில் மட்டும்..
இந்த சட்டம் சில விநோதங்களைக் கொண்டது. வடகிழக்கின் 7 மாநிலங்களுக்கு அதாவது அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே அமலில் இருக்கும் என கொண்டுவரப்பட்ட ஒரே சட்டம் இதுவாகத்தான் இருக்கும்.. எனக்கு தெரிந்து அப்படியான வேறு சட்டங்கள் எதுவும் இல்லை..
1990ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கும் இதேபோன்ற ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆயுதப் படை சட்டம்
இந்த ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கக் கூடிய சட்டத்தின் சில ஷரத்துகளை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 3 சொல்கிறது,,, "மாநிலத்தின் ஆளுநர் அல்லது மத்திய அரசு ஒட்டுமொத்த மாநிலத்தையோ அல்லது மாநிலத்தின் ஒருபகுதியையோ 'கலவரப் பகுதியாக' அறிவிக முடியும். அப்படி ஒருமுறை கலவரப் பகுதியாக அறிவித்துவிட்டாலேயே அது பாதுகாப்புப் படையினர் வசமாகிவிடும்.
பாதுகாப்புப் படை என்பது ராணுவம், விமானப் படை, மத்திய ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினராகிய சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் மற்றும் சி.ஐ.எஸ்.எஃப். ஆகியவையாகும்.
இந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் குவிந்துவிடும்.. இந்த அதிகாரங்கள் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல.. ஜவான் வரையில் பாதுகாப்புப் படையின் அனைத்து பிரிவினருக்குமே கிடைக்கும்...

முக்கிய அம்சங்கள் என்ன?
அதாவது,
- 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுதவற்கு தடை விதிக்கப்படும்.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களை கலவரப் பகுதியில் கண்டதும் சுட்டுக் கொல்லவும் அதிகாரம் இருக்கிறது,
- ஆயுதங்களுடன் பதுங்கியிருப்போரின் இடங்களை கட்டிடங்களை தகர்த்து எறியலாம்..
- எந்த ஒரு நபரையும் வாரண்ட் இல்லாமலேயே கைது செய்யலாம்.
- எந்த வாரண்ட்டும் இல்லாமல் ஒரு இடத்துக்கு சோதனையிட செல்லலாம்; பொருட்களை பறிமுதல் செய்யலாம்
- எந்த ஒரு நபரையும் கைது செய்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் எவ்வளவு தாமதமாகவும் ஒப்படைக்கலாம்.
- பொதுவாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்துவது வழக்கம். ஆனால் இங்கே எவ்வளவு தாமதமாகவும் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- ஆயுத பாதுகாப்புப் படையினரே தண்டனை விதிக்கவும் வகை செய்கிறது.
என நீள்கிறது இந்த அதிகாரங்கள்.

நினைத்துப் பாருங்கள்..
இப்படி வாரண்ட் இல்லாமல், காரணமே இல்லாமல், கண்மூடித்தனமாக கைது செய்யத்தான் வகை செய்கிறது ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம்.. அதுவும் கைது செய்யப்படுகிற நபரை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீஸ் நிலையத்திலேயே காவலில் வைக்க முடியும்..
அப்படியெனில் புதியதாக படைகளில் சேரும் ஜவான்கள் எப்படியெல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவார்களோ என்ற அந்த மக்களின் அச்சத்தை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.. அதுவும் நீண்ட பணிநேரம், குறைவான ஓய்வு, பயங்கரவாத அச்சுறுத்தலுடன் இருக்கும் ஜவான்களுக்கு இந்த சட்டம் எப்படி கை கொடுக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்..

பிரிவினை கோரிக்கை அல்ல..
இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரத்து பிரிவினைவாதிகளின் கோரிக்கை மட்டும் அல்ல. 8 மாநில மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் கோரிக்கை இது..
இந்த கோரிக்கைக்கு கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ.க்கள் என பலதரப்பும் ஆதரவு தருகிறார்கள்.. நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி இந்த சட்டத்தை விலக்கச் சொல்கிறது.. நீதிபதி வர்மா கமிட்டி இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது..
இந்த சட்டத்தை நீக்கக் கோரி மணிப்பூரின் இரோம் ஷர்மிளா 14 ஆண்டுகாலம் போராடி வருகிறார்...

நான் நீக்க போராடினேன்..
நாட்டின் உள்துறை அமைச்சாக இருந்த போது நானும் இதை நீக்குவதற்கு முயற்சித்தேன்... ஆனால் பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு படையினரும் இதனை விலக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நானும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சில திருத்தங்களை வரைவு செய்தோம்.. முக்கியமாக கைது, தேடுதல் நடவடிக்கை போன்ற பிரிவுகளில் இந்த திருத்தம் செய்தோம். அதேபோல் கைது செய்யப்படுகிற நபரை 24 மணிநேரத்தில் நீதிபதி முன் நிறுத்த வேண்டும் என்ற அம்சத்தையும் சேர்த்தோம்.
ஆனால் இந்த திருத்தங்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மனித உரிமைகளை யார் மீறினாலும் அதை கேள்விக்குள்ளாக்க வேண்டும். இத்தகைய சட்டங்களுக்கு பதிலாக மனிதாபிமான சட்டங்களை அமல்படுத்துவதுதான் அவசியமானதும் கூட..
இவ்வாறு சிதம்பரம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications